அன்பே சிவம்

அன்பே சிவம்
அன்பே சிவம்

புதன், 4 மே, 2011

சைவம்

சைவம்












சைவம் என்பது சிவசம்பந்தமுடையது. தில சம்பந்தமுடையது தைலம். சிலா சம்பந்தமுடையது சைலம். அதுபோல் சிவ சம்பந்தமுடையது சைவம். எனவே சிவம் என்று உளதோ அன்றே சைவம் உளது. ஆகவே தொன்மையும் நன்மையும் படைத்தது. ஏனைய சமயங்கள் ஒவ்வொரு குருமார்களால் தோன்றியவை. அதனால் அந்த சமயங்கள் அந்தந்த குருமாரகளின் பெயர்களாலேயே அமைந்துள்ளன. சைவசமயம் எல்லாச் சமயங்களையும் தனக்கு அங்கமாகக் கொண்டு தாயகமாய் விளங்குவது. எந்தச் சமயத்தையும் புறக்கணிக்காது தழுவி நிற்கும் சமரசமுடையது. இச்சமயத்தின் பெருமையை அநுபூதிமானாகிய தாயுமானவர அருளிச் செய்த தண்டமிழ் வாக்கால் அறிக.

"சைவ சமய மேசமயஞ் சமயா தீதப் பழம் பொருளைக்
கைவந்திடவே மன்றுள்வெளி காட்டுமிந்தக் கருத்தை விட்டுப்
பொய்வந் துழலுஞ் சமயநெறி புகுதவேண்டாம் முத்திதருந்
தெய்வ சபையைக் காண்பதற்குச் சேரவாருஞ் சகத்தீரே"


எல்லா உயிர்களும் ஈசன் தங்கியிருக்கும் கோயில்களே ஆகும். இறைவன் எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கின்றான்.ஆகவே சைவ சமயத்தைக் கடைப்பிடிப்போர்கள் எனது யான் என்ற இரண்டையும் தள்ள வேண்டும். எவரும் யாரும் யான் எனக் கொள்ள வேண்டும். இது தான் எல்லா நூல்களின் முடிந்த முடிவு. ஆன்றோரின் அநுபவ உண்மை. இந்த அநுபவம் வாய்க்கப் பெறாதவர் வானுயர் கோலம் கொள்ளினும் தேனெனும் கலைகள் கற்பினும் பயனில்லை. இதனைப் பரம அநுபவ ஞானியான அருணகிரிநாதர் இரண்டு வரிகளில் உபதேசிக்கின்றார்.

எனதி யானும் வேறாக எவரும் யாதும் யானாகும்
இதய பாவனா தீதம் அருள் வாயே
யான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகு புகும்.

எனத் திருவள்ளுவரும் திருவாய் மலர்ந்தருளுகின்றார். எனவே சைவசமயிகள், எனது யான் என்ற புறப்பற்றையும் அகப்பற்றையும் அறவே களைந்து, இறைவனைத் தன்னுள் கண்டு, எல்லாப் பொருள்களிலும் அப்பரமனைக் கண்டு, அது அதுவாய் ஒன்றுபட்டு நின்று, அவ்விறைபணியில் வழுவாது நின்று, மும்மலங்களும் நீங்க, இறைவன் செம்மலர் நிழலில் ஓங்கிப் பேரானந்தப் பெருவாழ்வில் திளைத்தல் வேண்டும்.

அவனே தானே யாகிய வந்நெறி ஏகனாகி யிறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை யின்றே


என்று சிவஞானபோதம் 10 வது சூத்திரம் உபதேசிக்கின்றது. ஆகவே சைவ சமயம் அருமையும் எளிமையும் உடையது. இதில் உள்ள உண்மைகள் எல்லோரும் ஒப்ப முடிந்தது. முடிந்த முடிவு சைவ சித்தாந்தம் ஆகும்.

இப்புனித மனிதப் பிறவியெடுத்த நாம் அனைவரும் சைவ சமய நெறி நின்று ஈடேறும் வண்ணம், இச்சமய உண்மைகளை உபதேசித்த குரவரகள் நால்வர். தாவில் சராசரமெல்லாம் சிவம் பெருக்கும் பிள்ளையார் திரு அவதாரம் புரிந்தார் என்ற திருவாக்கின்படி சம்பந்தர் முதலிய நால்வர் சிவம் பெருக்க வந்தவரகள். அவர்கள் பாடித்தந்த தேவார திருவாசகங்களும் ஏனைய ஆன்றோர்கள் பா;டிய அருள் நூல்களும், ஆக பன்னிரு திருமுறைகள் தோத்திரங்கள். மெய்கண்டார் முதலிய நால்வர் நம்பொருட்டு உணர்த்தியருளிய சாத்திரங்கள் பதினான்கு. தோத்திரங்கள் 12. சாத்திரங்கள் 14. சைவ சமயிகள் இவற்றைப் பெற்றுப் பூசித்து வாசித்துப் பெருநலம் பெறவேண்டும். எங்கும் சிவத்தைக் காணவேண்டும். தவத்தைச் செய்ய வேண்டும். எம்மதத்தையும் பழிக்கக் கூடாது.













விரிவிலா அறிவினர்கள் வேறொரு சமயஞ் செய்து
எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்ற தாகும்.

என்பது அப்பர் திருவாக்கு. எச்சமயத்தினர் எத்தேவரை வணங்கினாலும் அத்தேவராக நின்று அருள் புரியும் முழுமுதற் பரம்பொருள் சிவமேயாகும்.

"யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகியாங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர்".

என்பது சிவஞான சித்தியார். ஆதலால் அமைதியுள்ள மனதுடன் சைவ சமயிகள் வாழவேண்டும். சைவத்திற்கே உரிய பண்பு பணிவு.

தாழ்வெனும் தன்மையோடு சைவமாம் சமயஞ் சாரும் ஊழ் பெறல் அரிது.

என்கின்றார் அருணந்தி தேவர். சிவமே பொருள். அவரைச் சேரும் நெறி அன்பே. நமக்குப் பகை பிறவியே. அருட் கண்ணாலே சிவத்தைக் கண்டு களிக்க வேண்டும்.

ஓதி நூல்கோடி யுணர்ந்து உணரார்கள்பாதி வெண்பாவி
ல் பகரக்கேள் -ஆதி
சிவமே பொருள் அதனைச் சேரும்நெறியன்பே பவமே பகை அருளாற் பார்.


சைவம்












சைவம் என்பது சிவசம்பந்தமுடையது. தில சம்பந்தமுடையது தைலம். சிலா சம்பந்தமுடையது சைலம். அதுபோல் சிவ சம்பந்தமுடையது சைவம். எனவே சிவம் என்று உளதோ அன்றே சைவம் உளது. ஆகவே தொன்மையும் நன்மையும் படைத்தது. ஏனைய சமயங்கள் ஒவ்வொரு குருமார்களால் தோன்றியவை. அதனால் அந்த சமயங்கள் அந்தந்த குருமாரகளின் பெயர்களாலேயே அமைந்துள்ளன. சைவசமயம் எல்லாச் சமயங்களையும் தனக்கு அங்கமாகக் கொண்டு தாயகமாய் விளங்குவது. எந்தச் சமயத்தையும் புறக்கணிக்காது தழுவி நிற்கும் சமரசமுடையது. இச்சமயத்தின் பெருமையை அநுபூதிமானாகிய தாயுமானவர அருளிச் செய்த தண்டமிழ் வாக்கால் அறிக.

"சைவ சமய மேசமயஞ் சமயா தீதப் பழம் பொருளைக்
கைவந்திடவே மன்றுள்வெளி காட்டுமிந்தக் கருத்தை விட்டுப்
பொய்வந் துழலுஞ் சமயநெறி புகுதவேண்டாம் முத்திதருந்
தெய்வ சபையைக் காண்பதற்குச் சேரவாருஞ் சகத்தீரே"


எல்லா உயிர்களும் ஈசன் தங்கியிருக்கும் கோயில்களே ஆகும். இறைவன் எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கின்றான்.ஆகவே சைவ சமயத்தைக் கடைப்பிடிப்போர்கள் எனது யான் என்ற இரண்டையும் தள்ள வேண்டும். எவரும் யாரும் யான் எனக் கொள்ள வேண்டும். இது தான் எல்லா நூல்களின் முடிந்த முடிவு. ஆன்றோரின் அநுபவ உண்மை. இந்த அநுபவம் வாய்க்கப் பெறாதவர் வானுயர் கோலம் கொள்ளினும் தேனெனும் கலைகள் கற்பினும் பயனில்லை. இதனைப் பரம அநுபவ ஞானியான அருணகிரிநாதர் இரண்டு வரிகளில் உபதேசிக்கின்றார்.

எனதி யானும் வேறாக எவரும் யாதும் யானாகும்
இதய பாவனா தீதம் அருள் வாயே
யான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகு புகும்.

எனத் திருவள்ளுவரும் திருவாய் மலர்ந்தருளுகின்றார். எனவே சைவசமயிகள், எனது யான் என்ற புறப்பற்றையும் அகப்பற்றையும் அறவே களைந்து, இறைவனைத் தன்னுள் கண்டு, எல்லாப் பொருள்களிலும் அப்பரமனைக் கண்டு, அது அதுவாய் ஒன்றுபட்டு நின்று, அவ்விறைபணியில் வழுவாது நின்று, மும்மலங்களும் நீங்க, இறைவன் செம்மலர் நிழலில் ஓங்கிப் பேரானந்தப் பெருவாழ்வில் திளைத்தல் வேண்டும்.

அவனே தானே யாகிய வந்நெறி ஏகனாகி யிறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை யின்றே


என்று சிவஞானபோதம் 10 வது சூத்திரம் உபதேசிக்கின்றது. ஆகவே சைவ சமயம் அருமையும் எளிமையும் உடையது. இதில் உள்ள உண்மைகள் எல்லோரும் ஒப்ப முடிந்தது. முடிந்த முடிவு சைவ சித்தாந்தம் ஆகும்.

இப்புனித மனிதப் பிறவியெடுத்த நாம் அனைவரும் சைவ சமய நெறி நின்று ஈடேறும் வண்ணம், இச்சமய உண்மைகளை உபதேசித்த குரவரகள் நால்வர். தாவில் சராசரமெல்லாம் சிவம் பெருக்கும் பிள்ளையார் திரு அவதாரம் புரிந்தார் என்ற திருவாக்கின்படி சம்பந்தர் முதலிய நால்வர் சிவம் பெருக்க வந்தவரகள். அவர்கள் பாடித்தந்த தேவார திருவாசகங்களும் ஏனைய ஆன்றோர்கள் பா;டிய அருள் நூல்களும், ஆக பன்னிரு திருமுறைகள் தோத்திரங்கள். மெய்கண்டார் முதலிய நால்வர் நம்பொருட்டு உணர்த்தியருளிய சாத்திரங்கள் பதினான்கு. தோத்திரங்கள் 12. சாத்திரங்கள் 14. சைவ சமயிகள் இவற்றைப் பெற்றுப் பூசித்து வாசித்துப் பெருநலம் பெறவேண்டும். எங்கும் சிவத்தைக் காணவேண்டும். தவத்தைச் செய்ய வேண்டும். எம்மதத்தையும் பழிக்கக் கூடாது.













விரிவிலா அறிவினர்கள் வேறொரு சமயஞ் செய்து
எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்ற தாகும்.

என்பது அப்பர் திருவாக்கு. எச்சமயத்தினர் எத்தேவரை வணங்கினாலும் அத்தேவராக நின்று அருள் புரியும் முழுமுதற் பரம்பொருள் சிவமேயாகும்.

"யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகியாங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர்".

என்பது சிவஞான சித்தியார். ஆதலால் அமைதியுள்ள மனதுடன் சைவ சமயிகள் வாழவேண்டும். சைவத்திற்கே உரிய பண்பு பணிவு.

தாழ்வெனும் தன்மையோடு சைவமாம் சமயஞ் சாரும் ஊழ் பெறல் அரிது.

என்கின்றார் அருணந்தி தேவர். சிவமே பொருள். அவரைச் சேரும் நெறி அன்பே. நமக்குப் பகை பிறவியே. அருட் கண்ணாலே சிவத்தைக் கண்டு களிக்க வேண்டும்.

ஓதி நூல்கோடி யுணர்ந்து உணரார்கள்பாதி வெண்பாவி
ல் பகரக்கேள் -ஆதி
சிவமே பொருள் அதனைச் சேரும்நெறியன்பே பவமே பகை அருளாற் பார்.

கையெழுத்து

  தமிழில் போட்ட கையெழுத்து


‘திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது பழமொழி. மாணிக்கவாசகரின் மணிமொழிகள் திருவாசகத்தின் தேன் துளிகள். விண்ணோரும், மண்ணோரும், தென்னாட்டவரும், இந்நாட்டவரும், வெளிநாட்டவரும் எப்படி இவ்வெளிய நடையில், அழகு தமிழில் திருவாசகத்தைப் படைத்தார் என எண்ணி எண்ணி மனமுருகி, வாய்பிளந்த வண்ணம் இருக்கின்றனர்.
பேரருட்பெரியவர்
சைவத்திருமுறைகள் பன்னிரண்டு. அதில் திருவாசகம் எட்டாம் திருமுறையாகும். சிவனடியார்களில் நாயன்மார்கள் 63 பேர். சமயக்குரவர் நால்வர்-அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆவர். திருவாசகம் செந்தமிழுக்கு அன்பு மறையாகவும், உயிர்ப்பிணிக்கு மருந்தாகவும் உள்ளது. அப்பர் சரியைக்கும், சம்பந்தர் கிரியைக்கும், சுந்தரர் யோகத்திற்கும், மாணிக்கவாசகர் ஞானத்திற்கும் உரியவராக எண்ணப்படுவர்.
‘தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’
மாணிக்கவாசகர் மதுரைக்காரர். பெயர் வாதவூரர். மாணிக்கவாசகர் ஏறத்தாழ 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர். இவர் ஐப்பசி விசாகத்தில் பிறந்தாரென கீழ்க்கண்ட செய்யுள் மூலம் தெரியவருகிறது.
சித்திரையில் ஆதிரையில் திருஞானசம்பந்தர்
பக்திமிகும் அப்பர்பிரான் பங்குனி ரோகிணி
வித்துரிய ஐப்பசி விசாகத்தில் வாசகனார்
உத்திரத்தில் ஆவணியில் உதித்தார் நம்சுந்தரரே.
ஆதி சங்கரரைப் போல 32 ஆண்டுகளே வாழ்ந்தார் மாணிக்கவாசகர்.
அப்பருக்கெண் பத்தொன் றருள்வாத வூரர்க்குச்
செப்பிய நாலெட்டிற் றெய்வீகம்-இப்புவியிற்
சுந்தரர்க்கு மூவாறு தொன்ஞான சம்பந்தர்க்
கந்தம் பதினா றறி. – (மாணிக்கவாசகர் அகவல்)
அப்பருக்கு 81, வாதவூரர்க்கு 32, சுந்தரருக்கு 18, ஞான சம்பந்தருக்கு 16 வயதில் முக்தி.
வைகைகரையில் திருவாதவூரில் அமாத்தியர் எனும் அந்தணர் மரபில் சம்புபாதசிருதர், சிவஞானவதிக்குப் புதல்வராகத் தோன்றியவர். மன்னன் அரிமர்த்தன பாண்டியனின் முதல் அமைச்சர். தென்னவன் பிரமராயர் என்ற பட்டம் பெற்றவர்.
சோழநாட்டுக் கடற்கரையில் குதிரைகள் வந்துள்ள செய்தி கேட்ட மன்னன், வாதவூரரிடம் பணம் கொடுத்து வாங்கி வரச்சொன்னான். வாதவூரர் வழியில் திருப்பெருந்துறையில் தங்கினார். சோலை ஒன்றில் சிவாகமங்கள், வேதங்கள் ஒலிப்பதைக் கேட்ட வாதவூரர் அங்கே சென்று, சிவனே குருநாதர் தோற்றத்தில் மரத்தடியில் வீற்றிருக்க, கீழே அடியார்கள் கூடியிருக்கும் காட்சியைக் கண்டு, பசுவைத் தேடிய கன்று போல் விரைந்து சென்று காலடியில் வீழ்ந்து வணங்கி, அருள் தர வேண்டினார்.
”அறை கூவி ஆட்கொண்டருளி
மறையோர் கோலம் காட்டி அருளலும்
உளையா அன்பென்பு உருக ஓலமிட்டு” என்பார் மாணிக்கவாசகர்.
விண்ணவர் தேவர் மற்றவரிருக்க, குதிரை வாங்க வந்த வாதவூரரைத் திருப்பெருந்துறையில் சிவபெருமான் குருவாய்த் தோன்றி குருந்த மரத்தினடியில் அமர்ந்து தடுத்தாட்கொண்டு, தன் நீள் கழல்களைக் காட்டி ஸ்பர்ச, நயன, மந்திர தீட்சைகளை அளித்து மறைந்தார். வாதவூரரரை இறைவன் ‘மாணிக்கவாசக’ என அன்புடன் அழைத்தார்.
ஆண்டவனால் ஆட்கொள்ளப்பட்ட, வாதவூரர், பாடிய முதல் அடி
“நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” .
அவ்விடத்தில், மதுரை மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பணத்தில் இறைவனுக்கு ஆலயத்தைக் கட்டினார். பணத்தைத் திருப்பணிகளுக்கும், சிவனடியார்களுக்கும், மனத்தை சிவ வழிபாட்டிலும் கொடுத்த செய்தி கேட்ட மன்னன், மாணிக்கவாசகரைத் திரும்பி வருமாறு பணித்தான். மாணிக்கவாசகர் சிவன் கொடுத்த மதிப்பில்லா மாணிக்கமொன்றை அரசனிடம் அளித்து, “ஆவணித் திங்கள் மூல நாளில் குதிரைகள் வரும்” என்றார்.
பின்னர் அது பொய்யென்றறிந்த மன்னன், அவரைச் சிறையிலடைத்தான். சிவபெருமான் குதிரை வணிகனாகச் சென்று, நரிகளைப் பரிகளாக்கி அரசனிடம் கொடுத்தார். அவை, இரவில் மீண்டும் நரிகளாகி, மற்ற குதிரைகளையும் கடித்தன. இதனால் கோபம் கொண்ட மன்னன், மாணிக்கவாசகரை சுடுமணலில் கல்லேற்றி நிறுத்தினான்.
ஆண்டவன் வாங்கிய பிரம்படி
இதையறிந்த இறைவன் வைகையைப் பெருக்கி, மதுரையை வெள்ளத்தில் அமிழ்த்தி அச்சுறுத்த, அரசன் கரையை அடைக்க மக்களை ஏவினான். சிவபெருமான் கூலியாளாக, வந்தி எனும் பிட்டு வாணிச்சிக்கு உதவ வந்து, பிட்டை வாங்கிக் கொண்டு, கரையை அடைக்காமல், உறங்கியதால் அரசனிடம் பிரம்படி பட்டார். அடித்த அடி, அண்ட சராசரங்கள் மற்றும் அனைத்து உயிர்களின் மீதும் பட்டது. அடியாருக்காக அடி வாங்கிய இறைவன் வெள்ளத்தைக் குறைத்து மாணிக்கவாசகரின் பெருமையை உணர்த்தி, மறைந்தருளினார்.
உண்மையை உணர்ந்த மன்னனிடம் விடைபெற்ற அடிகள், மதுரையிலிருந்து புறப்பட்டு, பல திருத்தலங்களைத் தரிசித்து, மனம் கசிய திருப்பதிகங்கள் பல பாடினார். திருவாசகத்தில் 51 பகுதிகள் உள்ளன. இவற்றுள் 20 பகுதிகள், திருப்பெருந்துறையில் பாடப் பட்டன. இலங்கையிலிருந்து வந்த புத்தர்களை வாதில் வென்று, இலங்கை மன்னனின் ஊமை மகளைப் பேசச் செய்தார். அவள் வாயிலாகப் புத்தன் கேள்விகளுக்குப் பதில் சொல்லவைத்தார்.
ஆன்மிக வரலாற்றுச் சிறப்புகள்
* இறைவன் மனிதனுக்குச் சொன்னது ‘பகவத்கீதை’ – பகவான் கிருஷ்ணன் அருச்சுனனுக்கு அருளியது.
* மனிதன் இறைவனுக்குச் சொன்னது ’திருவாசகம்’ – மாணிக்கவாசகரிடம் சிவபெருமான் வேண்டி எழுதியது.
* மனிதன் மனிதனுக்குச் சொன்னது – திருக்குறள் – திருவள்ளுவர் படைத்தது.
இத்தருணத்தில் வேழமுகத்தோன் விநாயகப்பெருமான், தன்னுடைய தந்தத்தை உடைத்து வேத வியாசருக்காக, மகாபாரதத்தை எழுதியதையும் நினைவு கொள்க.
கைச்சாத்து
திருவாசகப் பாடல்கள் அதுவரை ஏட்டில் எழுதப்படாமலிருந்தன. திருவாசகத்தின் தேனினுமினிய தீந்தமிப் பாக்களைக் கேட்டு சொக்கிய மதுரைக் கடவுள் சொக்கநாதர், இப்புண்ணிய பூமியில் அந்தணனாய் உருக்கொண்டு மணிவாசகரைக்கண்டு, பாடல்களை எழுதிக்கொள்ள வேண்டினார். மாணிக்கவாசகர் இசைந்தருள, அட்சர லட்சம் பெறும் ஒவ்வொரு பாக்களையும் தம் அருள்புரியும் திருக்கரங்களால் ஓலைச்சுவடியில் எழுதினார். பாவை பாடிய வாயால் கோவை பாடுமாறு மீண்டும் இறைவன் வேண்ட, அவரும் பாடினார். இறைவன் விடைபெற்று, ’மாணிக்கவாசகர் சொற்படி அழகிய சிற்றம்பலவன் எழுதியது’ எனக் கையொப்பமிட்டு, ஓலைச்சுவடிகளைத் தில்லைப் பொன்னம்பலத்தின் கருவறையில் பஞ்சாட்சரப்படியில் வைத்தார். மறுநாள் அடியார்கள் ஏட்டைக்கண்டு மாணிக்கவாசகரை அழைத்து பொருள் விளக்க வேண்ட, ”அம்பலவாணரே இதன் பொருள்” என்றருளினார். இறைவன் அருட்பேரொளியாகத் தோன்றி, அத்தாட்சி அளித்து மாணிக்கவாசகரைத் தம்மோடு சோதியில் இணைத்துக்கொண்டார். அன்று ஆனி மாமக நன்னாள்.
எவ்வுலகிலும், எக்காலத்திலும், எவருக்கும் இறைவன், தில்லைக்கூத்தன், இதுவரை கைச்சாத்து அளித்ததில்லை. சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நிற்கும் திருவாசகத்தைக் கறந்த பால் கன்னலொடு, நெய் கலந்தாற்போல நமக்களித்த மாணிக்கவாசகர் ஒருவர் மட்டுமே, தாயிற்சிறந்த இறைவனால் கைச்சாத்துடன் நற்சான்றிதழ் பெற்ற மகாத்மா.
திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவில்
இறைவன் அமர்ந்த இடம் குருந்த மரத்தடி. குருந்த மரத்தின் இலைகள் ஒவ்வொரு கொத்திலும் மூன்று வகை இலைகளுடன் காணப்படும். அவ்விடமே, கோவிலாகியது. இறைவன் திரு உருவச்சிலைகள் இங்கு இல்லையே தவிர, இக்கோவில், சிற்பக்கலையின் உன்னத சிகரமாக இருக்கின்றது. பூத கணங்களே இக்கோவிலைக் கட்டினர் என்பர். சிற்பிகள் தங்களது பணி ஒப்பந்தங்களில் “தாரமங்கலம் தூணும், திருவலஞ்சுழி பலகணியும், ஆவுடையார் கோவில் கொடுங்கையும் நீங்கலாக” என்று எழுதுவர் எனக் கேள்வி. கோவில் கணக்குகளில், ஆளுடையார் கோவில் என்று காணப்படுகின்றது. இலக்கியங்களில், அநாதி மூர்த்தித் தலம், சதுர்வேதபுரம், யோகபீடபுரம் என்றும், கல்வெட்டுகளில் சதுர்வேதமங்கலம் என்றும், திருவாசகத்தில், சிவபுரம் என்றும் வழங்கப் பெற்றுள்ளது. தற்போது கோவிலின் பெயராலேயே, ஊரும் அழைக்கப்பட்டுவருகிறது.
கோவிலின் சிறப்பு
தலம்: திருப்பெருந்துறை
மூர்த்திகள்: ஆத்மநாதர், யோகாம்பிகை
தீர்த்தம்: ஒன்பது- சிவ தீர்த்தம், அக்கினி தீர்த்தம், தேவ தீர்த்தம், முனிவர் தீர்த்தம், அசுர தீர்த்தம், வாயு தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், நாராயண தீர்த்தம், பிரம தீர்த்தம்
புனித மரம்: குருந்த மரம்
கோவிலின் மூலவர் ஆத்மநாதர் ஸ்வாமி ஆவார். சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. சிவபெருமானுக்கு ஆவுடையாரும் (சக்தி பீடப்பகுதி) எதிரில் ஒரு மேடையும் (அமுத மண்டபம்) மட்டுமே உள்ளன. ஆவுடையாருக்குப் பின் சுவரில் 27 நட்சத்திரத் தீபங்களும், அதற்கு மேல் சூரிய, சந்திர, அக்கினி தீபங்களும் ஒளிர்கின்றன. அம்மன் யோகாம்பிகை சந்நிதியில் யோக பீடமும், அதன் மேல் அம்மன் பாதங்களும் மட்டும் உள்ளன. அதுவும் பலகணி வழியே மனத்தை ஒருமுகப்படுத்தினால் மட்டும் தரிசிக்க முடியும். மாணிக்கவாசகருக்கு தனிச் சந்நிதி இருக்கிறது. கோவிலில் கொடிமரம், நந்திக்கடவுள், சண்டேசர் ஆலயம் கிடையாது. இங்கே நடராஜர், விநாயகர், முருகர் தவிர பரிவார மூர்த்திகள் இல்லை. தீபாராதனை கருவறையை விட்டு, வெளியே வராது. புழுங்கல் சோறு, கீரை, பாகற்காய் ஆகியவற்றின் ஆவியே நிவேதனம். அடியார் மாணிக்கவாசகருக்காக மட்டும், வருடந்தோறும் ஆனித்திருமஞ்சனத் திருவிழா நடக்கிறது.
ஏனைய கோவில்கள் சரியை, கிரியை வழிபாட்டிற்கும், இக்கோவில் மட்டும் யோக, ஞான மார்க்க வழிபாட்டிற்கும் உரியதாக உள்ளது. அதனால் இக்கோவில் அமைப்பு மற்ற கோவில்களிலிருந்து பெரிதும் மாறுபட்டுள்ளது. மூலாதாரம் முதலாக ஆறு ஆதாரங்களின் வடிவாகவும், சிவனை அரூபமாகவும் நிர்மாணித்து, யோகிகளும், ஞானிகளும் வழிபடும் வகையில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது என்பர்.
பஞ்சாட்சர மண்டபம்
மூன்றாம் பிராகாரத்தில், இரண்டாம் கோபுர வாசலை ஒட்டி, பஞ்சாட்சர மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் மேல் தளத்தில் மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை எனும் ஆறு அத்துவாக்கள் கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
கற்சிலை ஓவியங்கள்
சிற்ப வேலைகளைப் பற்றிச் சொல்லி மாளாது. நேரில் கண்டால் பிரமிப்பு அடங்காது. வல்லப கணபதி, உக்கிர நரசிம்மர், பத்திரகாளி, ஊர்த்துவ தாண்டவர், பிட்சாடனர், வில் பிடித்த முருகன், ரிஷபாரூடர், சங்கரநாராயணர், குதிரைச்சாமி, குறவன், குறத்தி, வீரபத்திரர்கள், குதிரைக்காரர்கள், நடன மங்கைகள், விலங்குகள், உயிரோட்டத்துடன் ரத்த நாளங்கள் தெரிய மிளிர்கின்றன. தவிர டுண்டி விநாயகர், உடும்பும் குரங்கும், இரண்டே தூண்களில் ஓராயிரம் கால்கள், 1008 சிவாலய இறைவன், இறைவியின் உருவங்கள், பல நாட்டுக் குதிரைகள், நடனக்கலை முத்திரைகள், சப்தஸ்வரக் கற்தூண்கள், போன்ற அற்புதங்கள் மற்றும் நட்சத்திர மண்டலம், பச்சிலை ஓவியங்கள், கூரையிலிருந்து தொங்கும் கற்சங்கிலிகள் ஆகியன நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. மேற்கூரையான கொடுங்கை மிகச்சன்னமாக இழைக்கப்படுள்ளது. மரச்சட்டங்களில் குமிழ் ஆணி அடித்தது போல நுட்பமான வேலைகள் கல்லில் அடிக்கப்பட்டுள்ளன. அதில் நிஜக் கம்பிகள் போன்ற அமைப்பு உள்ளது. இதை நம்பாத ஒரு ஆங்கிலேயன் துப்பாக்கியால் சுட்டதால் ஏற்பட்ட ஓர் ஓட்டையும் கொடுங்கையில் உள்ளது. மொத்தத்தில் சிற்ப வேலைப்பாடுகள், கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி மிக மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன.
இக்கோவில், திருவாவடுதுறை ஆதீனத்தால் சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது. புதுக்கோட்டையிலிருந்து, 45 கி.மீ தொலைவில் உள்ளது. அறந்தாங்கியிலிருந்து, 14 கி.மீ தூரம்.
மாணிக்கவாசகர் தீந்தமிழைத் தேனில் தோய்த்தெடுத்து, பக்தியால் உருக்கி, அன்பினால் வார்த்து, எளிய நடையெனும் உளியால் பதமுடன் பக்குவமாய்ச் செதுக்கி, என்றென்றென்றும் நிலைத்திருக்கும் சிலைபோல் திருவாசகத்தைப் படைத்தார். ஆவுடையார் கோவிலைக் கட்டிய சிற்பிகளோ, தமது கலைத்திறமையால் இக்கோவிலைக் கட்டிச் சிலைகளை உருவாக்கிக் காலத்தால் அழியாத ஒரு பெரும் காவியமாகப் படைத்தார்கள்.
நூலின் மகிமை
மற்றெந்த நூலையும் படித்து, சிந்தித்து அவ்வாசிரியரின் மனத்தைப் படம் பிடித்து ஒரு கட்டுரை எழுதிவிடலாம். திருவாசகத்தை மட்டும் படித்துக் கொண்டே இருக்கத்தான் மனம் விழைகிறது. திருவாசகத்தைப் படித்தலும் கேட்டலும் எப்போதுமே ஒரு இனிய அனுபவமாக இருந்துவருகிறது. திருவாசகத்தைப் பற்றி ஆழ்ந்து அனுபவித்து எழுதினால் பல புத்தகங்களாக நிரம்பிவிடும். பானை சோற்றுக்கு ஒரு சோறுதான் இக்கட்டுரை.
“வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே” -
-வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளின் ஆளுடைய அடிகள் அருள்மாலை
மாணிக்கவாசகரின் உயர்ந்த பக்குவம்
மாணிக்கவாசகர் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தாலும், தன்னை மிகவும் தாழ்த்திக் கொண்டார். பணிவு, தன்னடக்கம், எளிமை ஆகியவற்றின் மறு உருவமாக இருந்தார். தன்னை நாயினும் கீழாகக் காட்டிக் கொண்டார்.
உதாரணங்கள்:
‘நாயினேனை நலமலி தில்லையுட்’
‘நாய்ச்சிவிகை ஏற்றினார்ப் போல’
“பிழைப்பு வாய்ப்பொன்று அறியா நாயேன்
குழைத்தசொல் மாலை கொண்டருள் போற்றி”
மேலும் ஒரு சாதாரண மனிதனுக்குரிய ஆசாபாசங்களைப் வெளிக்காட்டி, பசி, தூக்கம், பெண் மயக்கம், ஆகியவற்றிலிருந்து தன்னை எப்படி இறைவன் காத்து, அருளினார் என்பதையும், மாயையிலிருந்து தன்னை விடுவிக்கும் படியும் மனமுருகி வேண்டிக் கொண்டார்.
“நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து நானடுவே”
“அரவன் ஆண்டுதன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டோமே.”
“மண்ணி லேபிறந்(து) இறந்துமண் ஆவதற்(கு)
ஒருப்படு கின்றேனை
அண்ணல் ஆண்டுதன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே”
அதேபோல், மறுபிறவியைக் கொடுத்து விடாதே எனவும் மறவாமல் கேட்டுக்கொண்டார். ஞானத்தைக் கொடுக்கும்படி கெஞ்சினார்.
கற்பனைக்கெட்டா வர்ணனை வளம் பெற்றவர் மாணிக்கவாசகர். இறைவனின் கருணையை வாழ்த்தும் அவருடைய பிரபலமான பாடல்:
“வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே”
பொதுவாக, கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பர். மாணிக்கவாசகர், அதற்கு மாறாக, ஞானம் கிடைத்தவுடன் அப்பேரின்பத்தை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார்.
“அருளதறிய தறியேன் பருகியும் ஆரேன்
விழுங்கியும் ஒல்ல கில்லேன்
செழுந்தண் பாற்கடல் திரை புரை வித்து
உவாக்கடல் நள்ளுநீர் உள்ளகம் ததும்ப
வாக்கிறந்து அமுதம் மயிர்க்கால் தோறும்
தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊந்தழை
குரம்பை தோறும் நாயுடல் அகத்தே
குரம்பைகொண்டு இன்தேன் பாய்ந்து நிரம்பிய
அற்புத மான அமுத தாரைகள்
எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது”
வீட்டுக்கொரு திருவாசகம் இருக்க வேண்டும். அன்பர்கள், மெய்யுருக்கும் திருவாசகத்தைப் படித்தின்புற்று மனம்கசிந்து மெய்ஞானப்பாதையில் முன்னேற தில்லைக்கூத்தன் அருள்புரிவாராக.

சாந்தம் அருளும் சரபேஸ்வரர்

இரணிய வதம் -

தானே கடவுள் என்று சொல்லித் திரிந்த இரணியகசிபுவை அழிக்க அவதாரமெடுத்தார் விஷ்னு. அவனை அழிக்க சிங்க முகமும், மனித உடலும் கொண்டு “நரசிம்மராக” பூமியில் தோன்றினார். அவனைக் கொன்று தின்றார். அவனுடைய அசுர ரத்தம் விஷ்னுவை ஆட்கொண்டது. அவனை அழிக்க வந்த கோபம் அவரை ஆட்கொண்டது. உயிர்களுக்கும், தேவர்களுக்கும் அச்சம் ஏற்பட்டது. எல்லோரும் சிவனிடம் வேண்டச் சென்றனர்.
சரபேஸ்வரர் தோற்றம் -

மனைவியாக இருந்தாலும் லட்சுமிக்கும் நரசிம்மர் மேல் பயம் வந்தது. எங்கே தன்னையும் கொன்று விடுவாரோ என பயந்து எல்லாம் வல்ல ஈசனின் திருவடிகளில் சமர்ப்பனமானாள். எல்லையில்லாத அன்புடையவனும், கருனைக்கடலுமான ஈசனுக்கு கோபம் வந்தது.
ஒரு பெண் தன் காலடியில் விழுந்து வணங்கி, நற்கதி அருள வேண்டும் என வேண்டுவதைப் பார்த்தார். எட்டுக் கால்களும், நான்கு கைகளும்,இரண்டு இறக்கைகளும், கூர்மையான நகங்கள், பற்கள், யாளிமுகமும் கொண்ட சரபேஸ்வரராக மாறினார். பாதி உருவம் அகோர பறவையாகவும், மீதியுருவம் அகோர மிருகமாகவும் இருந்தது. அப்படியே நரசிம்மர் முன் தோன்றினார்.
நரசிம்மருடன் சண்டை -

மிக அகோரமாக எல்லா மிருகங்களும் இணைந்த உருவம் திடீரென தன் முன் தோன்றியவுடன் நரசிம்மருக்கு ஒன்றும் புரியவில்லை. தன்னை அழிக்க ஒரு சக்தி வந்திருப்பதாக எண்ணினார். சரபேஸ்வரரோ “ஹா” என்று ஒரு சத்தம் எழுப்பியவுடன், அண்டங்கள் அதிர்ந்தன. மேலோகங்கள் ஆடின, நரசிம்மருக்கு கோபம் போய் பயம் வந்தது. அந்தப் பயத்தினால் சரபேஸ்வரை தாக்க முற்பட்டபோது, சரபோஸ்வரின் ஸ்பரிசத்தால் நரசிம்மர் நாராயணானார்.
லட்சுமி நரசிம்மர் -
பயந்து போய் நின்று கொண்டிருந்த லட்சுமியுடன் சேர்ந்து ஈசனை வணங்கினார். ஈசனும் லட்சுமி நரசிம்மராக இந்த உலகில் மக்களுக்கு அருள் செய் என கட்டளையிட்டார்.
திருபுவனம் -

திருபுவனம் சிவபரத்துவத்தை விளக்கி நிற்கும் உயர்பெருந்தலம். சுவாமி நடுக்கம் தீர்த்த பெருமான் என்ற பொருளில் கம்பகரேஸ்வரர் என்ற திருப்பெயருடனும், அம்பாள் அறம்வளர்த்தநாயகி, தர்மசம்வர்த்தினி என்ற திருப்பெயருடனும் அருள் வழங்கும் சிறப்புடையது. இத்தலத்தின் பழம்பெயர் திருபுவனவீரபுரம் என்பதாகும்.
அசுவக்கிரீவன், விருஷபக்கிரீவன், வியாளக்கிரீவன், பிரமன், இலக்குமி, வருணன், விஷ்ணு, சித்ரரதன், சுகோஷன், மாந்தாதா, நாரதர், வரகுணர் முதலியோர் வழிபட்ட பெருமை உடையது இத்தலமாகும். இரணியனுடைய குருதியைப் பருகிய நரசிம்மம் அறிவு திரிந்து உலகம் அனைத்தையும் அழிக்கத் தொடங்கியபோது இத்தலப் பெருமான் சரபப் பறவை உருக்கொண்டு அதன் கொடுமையை அடக்கியதால் சரபேஸ்வரர் என்ற பெயருடன் இவ்வாலயத்தில் தனி மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.
பிரத்யங்கரா தேவி -

சக்தியின் உக்கிரமான வடிவம்தான் மஹா பிரத்யங்கரா. இந்த பிரத்யங்கரா நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடு எட்டு கைகளோடு, மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காட்சி தருபவள். சரப வடிவத்தின் இறக்கைப் பக்கம் இருப்பவள் இந்த பிரத்யங்கரா தேவி.இந்த பிரத்யங்கரா சிவனின் ஒரு பக்க சக்தி.

சிவ உருவங்கள்

தெய்வ நடராஜர் வரலாறு


சிவ வடிவங்களில், நடராஜர் உருவம் முக்கியமானது. இது உருவான வரலாறைக் கேளுங்கள்:
சோழ மன்னன் ஒருவன், சிவபெருமானின் நடனம் பற்றிய தகவலைப் படித்தான்; அந்தக் காட்சியை, சிலையாக வடிக்க எண்ணம் கொண்டான். தன் நாட்டிலுள்ள சிறந்த சிற்பிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் நடராஜர் சிலை யைச் செய்யும்படி வேண்டினான்; அவர்களும், ஒரு நல்ல நாளில் பணியைத் துவங்கினர். சிலைக்கான அச்சை வார்த்து, உலோகக் கலவையை அதில் கொட்டினர்; ஆனால், சிலை சரியாக வரவில்லை. பலமுறை முயற்சி செய்தும், இதே நிலை நீடித்தது. அவர்கள், மன்னனிடம் தங்கள் இயலாமையைத் தெரிவித்தனர். மன்னனுக்கு கோபம் வந்துவிட்டது.
“என்ன செய்வீர்களோ தெரியாது… சிலை செய்தாக வேண்டும். அதுவும் இன்று மாலைக்குள் செய்தாக வேண்டும்; இல்லாவிட்டால், உங்கள் அனைவரையும் கொன்று விடுவேன்…’ என, எச்சரித்து விட்டு போய் விட்டான்.
அவர்கள் எவ்வளவோ முயற்சித்தனர்; சிலை செய்ய முடியவில்லை. தங்கள் வாழ்வு இறுதிக் கட்டத் திற்கு வந்துவிட்டது என்று பயந்து போயிருந்த நிலையில், ஒரு முதியவரும், மூதாட்டியும் அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தனர். அப்போது, சிற்பிகள் ஐந்து வகை உலோகங்களை கொதிக்க வைத்துக் கொண்டிருந்தனர்.
அந்த பெரியவர்கள், அதைக் கஞ்சி என நினைத்து, தங்களுக்கு பசிப்பதாகவும், கஞ்சியை ஊற்றும்படியும் கேட்டனர். எரிச்சலில் இருந்த சிற்பிகள், “குடியுங்கள்… நிறைய குடியுங்கள். நாங்கள் சாகப் போகிறோம்; போகும் போது, உங்களுக்கு தானம் செய்த புண்ணியத்தைச் சேர்த்துக் கொண்டு போகிறோம்…’ என்று சொல்லி, ஒரு செம்பில், நாலு அகப்பை உலோகக் கலவையை ஊற்றிக் கொடுத்தனர்.
முதியவர்கள் அதை குடித்தனர். உடனே நடராஜ மூர்த்தியும், சிவகாமி அம்மையுமாக மாறி, சிலை வடிவில் காட்சியளித்தனர். தங்கள் உயிரைக் காக்க வந்த முதியவர்கள் சிவனும், பார்வதியும் என்றறிந்த சிற்பிகள், ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். சிலை அமைந்த வரலாற்றை மன்னனுக்கு எடுத்துக் கூறினர். மன்னனும், இறைவனின் திருவருளை வியந்து, சிதம்பரத்தில் கோவில் கட்டி, பிரதிஷ்டை செய்தான்.
அந்நியர் படையெடுப்பின் போது, கோவில்களில் உள்ள சிலைகள் நொறுக்கப்பட்டன. அபூர்வமான நடராஜர் சிலை பாழ்பட்டு விடக் கூடாது என்பதால், தில்லை வாழ் அந்தணர்களும், ஆயிரத்தெட்டு மடாதிபதிகளும் சிலையைஎடுத்துக் கொண்டு, ஊர் ஊராகச் சென்றனர். கடைசியாக, மலையாள தேசத்துக்கு எடுத்துச் சென்று, ஒரு ஆலமரப்பொந்தில் ஒளித்து வைத்தனர்.
இதனால், அந்த ஊருக்கு, “ஆலப்புழை’ என்று பெயர் ஏற்பட்டது. அந்நியர்கள் சென்றதும், அந்தச் சிலையை அவ்வூரிலுள்ள அம்பலத்தில் (கோவிலில்) வைத்து பூஜை செய்தனர். அந்த இடத்துக்கு, “அம்பலப்புழை’ என்று பெயர் ஏற்பட்டது. இவ்வாறு பல்வேறு சிரமங்களைக் கடந்து, நடராஜர் சிலை உருவானது.
சிவாலயங்களில் உள்ள நடராஜர் சன்னதிகளில், ஆண்டில் ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்தப்படும். அதில், ஆனி உத்திர நாளும் ஒன்று. இந்த நன்னாளில், நடராஜப் பெருமானை வணங்கினால், பிறப்பற்ற நிலை கிடைக்கும்.

திரிபுராந்தக மூர்த்தி



வரலாற்றுக் கதை -
தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூவர். இவர்கள் பிரம்ம தேவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார்கள். தவத்தை மெச்சி, தரிசனம் அளித்த நான்முகனிடம், “”நினைத்த இடமெங்கும் செல்லும்படியாக ஆகாய மார்க்கத்தில் பறக்கத் தக்க மூன்று கோட்டைகள் வேண்டும். நாங்கள் மூவரும் ஒன்று சேர்ந்து இருக்கும்போது மட்டுமே ஒரே கணையால்தான் எங்கள் உயிர் பிரிய வேண்டும்” என்ற அரிய வரத்தைப் பெற்றார்கள்.
வரம் பெற்ற பின் இந்திராதி தேவர்களை துன்புறுத்தினார்கள். வானவர்களைக் கடுந்துயருக்கு ஆளாக்கிய இம்மூவரையும் யாராலும் வெல்ல முடியவில்லை. மேலும் அவர்கள் சிவ பக்தர்களாகவும் திகழ்ந்தார்கள். எனவே அவர்களை சிவபெருமான் மட்டுமே அழிக்க முடியும் என்று கருதிய தேவர்கள், பிரம்மனுடனும், திருமாலுடனும் சென்று சிவபெருமானை வேண்டினர்.
உடனே இறைவன் இட்ட ஆணைப்படி தேவதச்சன் விஸ்வகர்மா, ரதம் ஒன்றை தயாரிக்க, வில் அம்பு சகிதமாக (மேருமலை வில்லாகவும், வாசுகி என்ற பாம்பு நாணாகவும் அமர்ந்ததாம்) நான்கு வேதங்கள் நான்கு குதிரைகளாக்கி, பிரம்மா சாரதியாக இயக்க திரிபுரங்களை எதிர்க்கப் புறப்பட்டார் சிவபெருமான்.
“தேவர்களையும் காக்க வேண்டும், சிறந்த சிவ பக்தர்களாகிய அந்த அரக்கர்களையும் வதம் செய்யக் கூடாது’ என்று கருணை கொண்ட இறைவன், வில்லை வளைக்காமல், நாணைப் பூட்டாமல் அண்ட சராசரங்கள் நடுங்கும் வண்ணம் ஒரு புன்னகை செய்தார். அப்போது தோன்றிய அக்னியினால் முப்புரங்களும் எரிந்து சாம்பலாயின. தன்னைப் பூஜித்து வந்த அந்த மூவரில் இருவரை தன் வாயில் காப்போராகவும், ஒருவரை குடமுழா முழுக்குபவராகவும் தமது அருகில் இருக்கும்படி ஆணையிட்டார் அந்த திரிபுராந்தக மூர்த்தி.
தத்துவம் -
திரிபுரத்தை எரியுண்ணுமாறு செய்ததற்கு, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களைத் தன் திருவருள் நோக்கால் சுட்டு எரித்தான் என்று பொருள்.
திருமுறைகளில் திரிபுராந்தக மூர்த்தி -
“அப்பு அணி செஞ்சடை ஆதிபுராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யார் அறிவாரோ”

- திருமந்திரம்.
“ஐயன் நல்லதிசயன் அயன் விண்ணோர் தொழும்
மையணி கண்டனார் வண்ணம் வண்ணவான்
பையரவு அல்குளாள் பாகம் ஆகவும்
செய்யவன் உறைவிடம் திருவிற் கோலமே!”

- சம்பந்தப் பெருமான்.

இலிங்கோத்பவர் மூர்த்தி


இலிங்கோத்பவர் மூர்த்தி மகேஸ்வர வடிவங்களில் ஒன்றாகும்.

வரலாற்றுக் கதை -
நான்முகனுக்கும் திருமாலுக்கும் தம்முள் யார் பெரியவர் என்ற வினா எழுந்தது. நான்முகன், “நானே படைக்கிறேன்; ஆகவே நான் தான் பெரியவன்” என்றார். திருமால், “நான் காக்கிறேன்; ஆகவே நான் பெரியவன்” என்றார். இவர்களிடையே வாதம் வலுத்தது.
அப்போது அங்கே பேரொளிப்பிழம்பாகிய ஜோதித்தம்பம் ஒன்று எழுந்தது. அத்தம்பத்தின் அடிமுடி அறிந்தவரே பெரியவர் என்று அசரீரியாக வானொலியும் கேட்டது. நான்முகனாரும் திருமாலும் அத்தம்பத்தைக் கண்டு வியப்புற்றனர். தமக்குள் ஒரு உடன்பாட்டுக்கு வந்தனர்.
நான்முகன் அத்தம்பத்தின் முடியைக் கண்டறிவதெனவும் ஒத்துக் கொண்டனர். தம்பத்தின் முடியைக் காண அன்னமாகி நான்முகன் மேலே பறந்து செல்லலானார். திருமாலும் வராக(பன்றி) வடிவேற்று பூமிக்குள் சென்று அடி தேடலானார். பல காலம் இருவரது முயற்சியும் தொடர்ந்து நடந்தது.
பறந்து சென்ற அன்னமாகிய நான்முகன் தனது வானவழியில் ஒரு தாழம்பூ விழுவதைக் கண்டு அது எங்கிருந்து வருகிறது என வினவ, அத்தாழம்பூ தான் ஜோதித்தம்பத்தின் உச்சியிலிருந்து புறப்பட்டுப் பல காலமாகக் கீழ் நோக்கி வந்து கொண்டிருப்பதாயும் கூறியது. நான்முகன் தாழம்பூவைத் தன்பால் சேர்த்துக் கொண்டு, தம்பத்தின் உச்சியைத் தான் கண்டு விட்டதாகவும் அதற்குத் தாழம்பூவே சாட்சி எனக் கூறினார்.
திருமால் பலகாலும் முயன்றும் தாம் தம்பத்தின் அடியைக் கண்டறிய முடியவில்லை என ஒப்புக் கொண்டார். இருவரும் ஜோதித்தம்பமாக விளங்குபவர் சிவபெருமானே என அறிந்து தம்பேதைமையொழிந்து பணிந்தனர். அவ்விருவர் அகந்தையையும் போக்கிச் சிவபெருமான் உலகிற்குத் தன் பேரொளி வடிவத்தைக் காட்டிய கோலமே இலிங்கோற்பவ மூர்த்தியாகும்.
தத்துவம் -
நான்முகன் அறிவு வடிவானவர். திருமால் செல்வத்தின் நாயகர். அறிவும் செல்வமும் இறுமாப்பைத் தரவல்லன. அகந்தை மிகச் செய்வன. ஆனால் அறிவினாலும் செல்வத்தாலும் இறைவனைக் காண முடியாது என்பதே லிங்கோத்பவர் உணர்த்தும் தத்துவம்.
திருமுறைகளில் இலிங்கோற்பவமூர்த்தி -
“அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய்
நிலமுதற் கீழண்டமுற நின்றதுதான் என்னேடி
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம்
சலமுகத்தால் ஆங்காரம் தவிரார்காண் சாழலோ”

- மணிவாசகர்.
“அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட
அங்ஙனே பெரிய நீ சிறிய
என்னையாள விரும்பி என் மனம் புகுந்த
எளிமையை யென்றும் நான் மறக்கேன்
முன்னம்மால் அறியாவொருவனாம் இருவா
முக்கணா நாற்பெருந்தடந்தோள்
கன்னலே தேனே யமுதமே கங்கை
கொண்ட சோளேச் சரத்தானே”

- திருமாளிகைத்தேவர்

சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள்

டந்த 2500 ஆண்டுகளில் தமிழில் தோற்றம் கொண்டு வளர்ந்தமைந்த இலக்கியங்களைத் தமிழ் இலக்கியங்கள் எனக் கூறலாம். எழுந்த காலம், மற்றும் இலக்கியத்தின் யாப்பியல், கருப்பொருள் முதலியன தொடர்பாகத் தமிழ் இலக்கியங்களை  வேறு பிரித்து ஆராயும் முறை நிலவி வருகிறது. சங்க இலக்கியம், பல்லவர் கால இலக்கியம், இருண்ட கால இலக்கியம், சோழர் கால இலக்கியம், தற்கால இலக்கியம் எனப் பாகுபடுத்தல் ஒருவகை; யாப் பியல் மற்றும் கட்டமைப்பு வகையில் பெருங்காப்பியம், சிறு காப்பியம் எனப் பகுத்தல் மற்றொரு வகை. தமிழ்நாட்டு மக்களால் வழிபடப் பெறும் கடவுளர்களை மையப்படுத்தி எழுந்த இலக்கியங்களைச் சமய இலக் கியங்கள் என்றால் வழக்கு. மேற்குறித்த சமய இலக்கியங் களில் ஒருவகை சிவனைக் குறித்து எழுந்த சைவ இலக்கியங்கள். இவற்றுள் சிவனை மையப்படுத்தி எழுந்த சைவ இலக்கியங்களே இக்கட்டுரையில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
சைவ- இலக்கியங்கள் என்ற குறியீடு

திருமுருகாற்றுப்படை காலம் தொடங்கித் தமிழ் மக்கள் வழிபடு கடவுளர்களிடையே உறவுமுறை கற்பிக்கும் பழக்கம் ஏற்பட்டது. எனவே, அவ்வகையில் தாய்த்தெய்வ வழிபாடாகிய சக்தி வழிபாடு, முருக வழிபாடு, கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப்பின் தமிழகத்தில் தோற்றம் கொண்டு வளர்ந்த கணபதி வழிபாடு, சிவன்- சக்தி- முருகன் அம்சமாகக் கருதப்பட்ட சிறுதெய்வ வழிபாடு என்பன எல்லாம் ஒருங்கிணைந்த சிவவழிபாட்டின் அங்கங்களாயின. எனவே, சைவ இலக்கியங்கள் என்ற குறியீட்டில் மேற்குறித்த அனைத்து வழிபாட்டு இலக்கியங்களும் ஒருங்கிணைத்துக் கொள்ளப்பட்டன. வைணவம் மட்டும் தனித்து ஆராயப்பட்டது.
16 ஆயிரம் சைவத் தமிழ் நூல்கள்

உலக மொழிகளோடு ஒப்பிடுகையில், எண்ணிக்கை, காலப்பழமை, யாப்பியல், இசை வடிவங்கள் கொண்ட தமிழ் இலக்கியப் பரப்பே பரந்ததும், விரிந்ததும் ஆகும். தமிழில் கடைச்சங்க காலம் முதற் கொண்டு, 20-ஆம் நூற்றாண்டின் இறுதி வரை தோற்றம் கொண்ட பல்வேறு வகையான இலக்கியப் பரப்பில், அறுபது விழுக்காட்டு இலக்கியங்கள் சைவ சமயம் குறித்து எழுந்தன என்பது நன்கு நினைவு கூரப்பட வேண்டியதாகும். சைவ சமயக் களஞ்சியம் ஒன்றைத் தயாரிக்கும் எனது கடந்த ஐந்தாண்டு கால முயற்சியில், சைவ சமய இலக்கியங்களின் தொகை பதினா றாயிரத்தை நெருங்குவது வியப்பாக நின்றது. இவற்றில், எண்பது விழுக்காட்டு நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. இவற்றுள் இடம் பெற்ற பாடல்களின் தொகை பல லட்சங் களைத் தாண்டும்.
தொல்காப்பியம் முதல் சிலம்பு வரை

கால வரிசைப்படி, சைவ சமயம் தந்த தமிழ் இலக்கியங்களை இச்சிறிய பதிவில் அடை யாளப்படுத்த மட்டுமே இயலும். விரிவான ஆய்வுகளுக்கு வாய்ப்பு இல்லை. 2750 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில், வெற்றி தருபவளாகக் கொற்றவை குறிக்கப்படுகிறாள். "கொடி நிலை கந்தழி' என்று தொடங்கும் நூற்பாவில், முருகன் பற்றிய குறிப்புள்ளதாக ஒருசிலர் கருதுகின்றனர். தனிப்பாடல்களாக எடுத்துக்கொண்டால், எட்டுத் தொகையுள் ஒன்றாகிய பரிபாடலில், இசை வடிவாக முருகன், காடுகிழாள் (காளி) குறித்தெழுந்த சைவ- தனி-இசைப்பாடல்களைக் காண முடிகிறது. சைவம் தந்த தனிநூலாக, முதல் கொடையாகக் கிடைத்துள்ள நீண்ட வரிகளால் அமைந்தது நக்கீரனாரின் திருமுருகாற்றுப் படை. சிறிய இடைவெளிக்குப் பின் கி.பி. மூன்றாம் நூற்றாண்டினதாகக் கொள்ளத்தக்க இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில், சிவ- சக்தியாகிய உமையைப் போற்றிப் பாடும் தனிக் காதையாக வேட்டுவ வரியும், முருகனைப் புகழ்ந்து பாடும் "குன்றக்குரவை'யும் அமைந்தன.
முதல் சிற்றிலக்கிய வடிவங்கள்

கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னதாகச் சங்க இலக்கிய அகப்பாட்டு நெறியில், சிவனைப் பாடுபொரு ளாகக் கொண்டு கல்லாடம் என்ற அரிய நூல் தோன்றி யது. "கல்லாடம் கற்றவனிடம் சொல்லப் படாதே' என்பது பழமொழி. முதல் கணபதி வாழ்த்து இந்நூலில் இடம் பெற்றது. தொடர்ந்து காரைக்கால் அம்மையா ரின் மூத்த திருப்பதிகங்கள் இரண்டும், அற்புதத் திருவந்தாதியும், திரு இரட்டை மணிமாலையும் தோற் றம் கொண்டன. பதிகம் (10 பாடல்களைக் கொண்டது). அந்தாதி- (ஒரு பாடலின் நிறைவை அடுத்த பாடலின் தொடக்கமாகக் கொண்டு 100 பாடல்களில் அமைவது). இரட்டை மணிமாலை (இரண்டு வகை யாப்புகள் அமைந்த பாடல்களை மாறிமாறி அடுக்கி 20 பாடல்களில் நிறைவிப்பது) என்ற புத்திலக்கிய வடிவங்கள், அம்மையார் தமிழுக்குத் தந்த இலக்கியக் கொடைகளாகும்.
தமிழ் ஆகமம்- திருமந்திரம்

"யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற தொடருக்கு அடுத்துத் தமிழ் இனப்பெருமை பேசும், "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்ற சமய- சமரசத்தை முன்வைத்த திருமூலரின் திருமந்திரம், சைவம் தந்த தமிழ் இலக்கியக் கொடைகளுள் சிறப்பாகக் குறிக்கத் தக்கது, "என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே' எனக் கட்டியம் கூறித் தொடங்கும்  திருமூலர், சைவத்தைத் தோத்திர நெறியிலிருந்து சாத்திர நெறிக்கு எடுத்துச் சென்றார். கி.பி. 14-ஆம் நூற்றாண்டு காலப் பகுதியில்,  அறிவாராய்ச்சிக்கு உட்படுத்தக் கூடிய அறிவியல் பூர்வமான, "சைவ சித்தாந்தம்' என்ற பெருநெறி தோன்ற வித்திட் டவர் திருமூலர். தென்னாட்டு அறிஞர்களால் வடமொழியில் படைக்கப்பட்ட ஆகமங்களை, மொழிபெயர்ப்புச் செய்யாமல், தமிழ் ஆகமமாகத் திருமந்திரம் படைக்கப்பட்டது. அறம், யோகம், மருத்துவம், தத்துவம் எனத் தமிழில் எழுந்த ஒரு சைவக் கலைக்களஞ்சியமாகவே திருமந்திரம் நிற்கிறது. உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்நூலை அறிவாராய்ச்சிக்கு உட்படுத்தினால் கிடைக்கும் புதையல்கள் அன்னைத் தமிழுக்கு அளப்பரிய செல்வங்களை வழங்கும்.
500 ஆண்டு பொற்காலம்

கி.பி. 650 காலப்பகுதி தொடங்கி, 550 ஆண்டு காலம் தமிழ்மொழியைச் சைவ சமயமே ஆட்சி செய்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் 12-ஆம் நூற்றாண்டு வரை அளப்பரிய சிறப்புடைய சைவப் பனுவல்களும், சிற்றிலக்கியங்களும், பெருங்காப் பியங்களும் தோன்றின.  பிற்காலச் சோழர்களின் எழுச்சியும், நால்வர் பெருமக்களின் வருகையும், சைவம் வழித் தமிழ்மொழிக்கு விலைமதிப்பற்ற ஆபரணங்களை அணிவிக்கக் காரணமாயின. பாலி மொழியை முன்வைத்துத் தமிழை அழிக்க முயன்று பௌத்தர்களின் முயற்சியையும், வடமொழியை முன்வைத்துத் தமிழர் உயர் கலைகளைச் சீரழிக்க முயன்ற சமணர் முயற்சி களையும் எதிர்த்துப் பெரும் சமயப் போராட்டம் நிகழ்த்திய சைவர்கள், வெற்றிவாகை சூடி, தமிழ் அன்னைக்கு அரியணை தந்தனர். "நாளும் இன்னிசை யால் தமிழ் வளர்க்கும் ஞானசம்பந்தன்', "நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் நாவி னுக்கு அரையன்' என்ற சுந்தரர் பதிவுகள் அன்னார் இருவரும் சைவத்தின் பெய ரால் தமிழ்வளர்த்த திறம் உரைத்தன.
சைவத் திருமுறைகள்

மூவர் தேவாரம், சங்க காலத்தில் நிலவிப் பின் அழிவுற்ற தமிழ் இசை வடிவங்களாகிய 103 பண்களில் 22 பண்களை மீட்டெடுத்தது. புத்திலக்கிய வடிவங்களை ஞானசம்பந்தர் படைத் தளித்தார். தாண்டகம் நாவரசர் கொடையாக அமைந்தது. கருவறையில் நிகழ்த்தப்படும் அருச்சனை என்பது "தமிழ் இசையால் பாடுவதே' என்பதை சுந்தரர் வரலாற்றில் வைத்துச் சேக்கிழார் புரட்சி செய்தார். உலகச் சமய இலக்கியங்களுள் நெஞ்சத்தை உருக வைக்கும் அனுபவ வெளிப் பாடாகத் திருவாசகத்தை மாணிக்கவாசகர் தமிழுக்குக் கொடையாக வழங்கினார். ஒன்பதாம் திருமுறை இசைப் பாமாலையாய் வந்தது. 11-ஆம் திருமுறையில் புத்திலக்கிய வடிவங்களில் 40 சிற்றிலக்கியங்கள் இணைந்தன. வரலாற்றுப் பெட்டகமாக கடவுளினும் பெரியன் மனிதன் என்பதை நிலைநாட்டிச் சேக்கிழார் பெரிய புராணம் என்ற காப்பியம் உபகரித்தார்.
சைவ சித்தாந்தம்

சைவம் தமிழ்மொழிக்குத் தந்த விலைமதிப்பற்ற கொடைகளுள் ஒன்று சைவ சித்தாந்தம். விவேகானந்தருக்கு அது, ஜே.எம். நல்லசாமி பிள்ளையால் மொழிபெயர்த்துத் தரப்பட்ட போது, அவரை அது வியக்க வைத்தது. மூவர் தேவாரம், திருமந்திரம் தந்த ஒளியில் மெய்க் கண்டார் படைத்த சிவஞான போதமும், அதற்கு சிவஞான யோகிகள் வரைந்த பேருரையும் அளவற்ற தமிழர்களின் நுண்மாண் நுழை புலனுக்குக் கட்டியம் கூறி நின்றன. இந்நூலுக்கு அருணந்தி சிவாச்சாரியார் எழுதிய செய்யுள் வடிவிலான உரை நூலே, சிவஞான சித்தியார் என்பது. தமிழின் பெருமை பேசும் ஆறு நூல்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்பட்டது. மெய்கண்ட சாத்திரங்களும், பண்டார சாத்திரங் களும் தமிழ்மக்கள் கற்றுணர்ந்த வடமொழி மற்றும் தருக்க அறிவுக்குச் சான்று கூறுவன.
சைவம் தந்த அறக்கொடைகள்

வள்ளுவத்தையும், பதிணென் கீழ்க்கணக்கில் உள்ள ஏனைய நூல்களையும் வழிமொழிந்து, சைவநெறி நின்ற ஔவையார், குமரகுருபரர், சிவப்பிரகாசர், உலகநாதர் போன்றோர் அரிய எளிய அறநூல்களைச் சைவத்தின் பெயரால் வடித்தமைத்தனர். கச்சியப்பரின் கந்தபுராணம், பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம், சிவஞான சுவாமிகளின் காஞ்சிப் புராணம் என்பன தமிழன்னைக்குச் சூட்டப்பெற்ற விலைமதிப்பற்ற ஆபரணங்கள். சிற்றிலக்கியம், தனிப்பாடல் வரிசையில் சித்தர்கள் ஆற்றிய பங்கும் மகத்தானது. ஒட்டக்கூத்தர், புகழேந்தி, பட்டினத்தார், தாயுமா னார், சிவப்பிரகாசர், குமரகுருபரர், சைவத்திருமடத்து தலைவர்கள், அருளாளர்கள் வழங்கிய நூல் தொகுதிகள் கணக்கில் அடங்காதன.
பல்வகை இலக்கியச் செல்வங்கள்

சிவநெறி வழாது நின்று முருகனைப் பாடுபொருளாகக் கொண்டு, சந்தத் தமிழ் தந்த அருணகிரியாரின் திருப்புகழ் ஓர் தமிழ் அற்புதம். முருகனை மையப் பொருளாக்கி வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், சிதம்பர சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் ஆகியோர்  நெஞ்சுருக்கும் கவிமழை பொழிந்தனர். ஈழத்து அறிஞர்களின் சைவப்பணிகள் தனியே ஆராயத்தக்கன. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிற்கால கம்பராகவே திகழ்ந்தார். சீர்காழி மூவராகிய முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாச்சலக் கவிராயர் என்பார் தமிழில் சிவனை மையப்படுத்தி இனிய பதங்களையும், கீர்த்தனைகளையும் வழங்கித் தமிழ் இசைக்கு ஆக்கம் சேர்த்தனர். கோபால கிருஷ்ணபாரதி, சுத்தானந்த பாரதி முதலியோரின் சைவப் பங்களிப்பும் குறிக்கத்தக்கன.
விருப்பு- வெறுப்பற்ற ஆய்வு

இன்னும் சைவத் தமிழ் இலக்கியங்கள் படைத்த நூறு நூறு கவிஞர்களும், ஆயிரக்கணக்கான நூல்களும் தமிழன்னை செம்மொழி சிம்மாசனம் ஏறத்துணை நின்றன. அவற்றையெல்லாம் விரிப்பின் பெருகும். சைவம் வளர்த்த தமிழை ஒதுக்கிவிட்டுத் தமிழ்மொழியின் சீர்மையை நிலைநாட்ட முயல்வது நிரம்பாது. விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டுத் தமிழ் அறிஞர்களும், ஆர்வலர்களும், பல்துறை அறிஞர்களும் சைவ இலக்கியங்களை ஆய்ந்தால் அவை தரும் பெருமிதம் கடல் அளவுக்கும் மேல் என்பது புலனாகும். காலமாற்றங்களால் யாவும் சரியாக மதிப்பிடப்படவே செய்யும் என்று நாம் நம்பலாம்.

தேவர் குறளும் திருநாள் மறை முடியும்

மூவர் தமிழும் முனிமொழியும்- கோவைத்

திருவாசகமும் திருமூலர் சொல்லும்

ஒருவாசகம் என்று உணர்.
சைவத்தின் சமூகப் பெருமிதப் பதிவுகள்

சைவத்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் கீழே தரப்பட்டுள்ள அரிய தொடர்கள். இத்தகு நூல்களின் சமயங்கடந்த சமூக நாட்டத்தைப் பறைசாற்ற வல்லன.

"இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை'
"நாமார்க்கு குடியல்லோம் நமனை அஞ்சோம்'
"யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி'
"எல்லாரும் இன்புற்றிருக்கனைப்பதுவே அல்லாமல்
வேறு ஒன்று அறியேன் பராபரமே'
"என் கடன் பணி செய்து கிடப்பதே'
"வான் முகில் வழாது பெய்க; மலிவளம் சுரக்க'
"சாத்திரம் பல பேசும் வழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்'
"பறைச்சி ஆவது ஏதுடா? பனத்தி ஆவது ஏதடா?
இறைச்சி தோல் எலும்பிலே இலக்கமிட்டு இருக்குதோ?'
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்'
"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்'

இத்தகு தொடர்களும், இவை போல்வன பலவும், சமயம் சார்ந்த பண்பாட்டில் செழித்த அரிய தமிழ்க் கொடைகள்.

கட்டுரை மலேசியத் தமிழ் நூல் வெளியீட்டில் ஈழத்தமிழர்களின் பங்களிப்பு என். செல்வராஜா - நூலவியலாளர், லண்டன்




முன்னுரை

தாயகத்திலிருந்து மலேயாவுக்குப் பொருளாதார நோக்கில் புலம்பெயர்ந்த நிகழ்வினையே நாம் ஈழத்தமிழரின் முதலாவது புலப்பெயர்வாகக் கருதுகின்றோம். 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலல் ஆரம்பிக்கப்பட்ட இப்புலப்பெயர்வு இரண்டாவது உலகமகா யுத்தத்துடன் முடிவுக்கு வந்ததாகக் கருதப்படுகின்றது. இப்புலப்பெயர்வின்போது அங்கு சென்று பணியாற்றியவர்களின் இலக்கிய முயற்சி பற்றிய தேடலை நான் தொகுத்துவரும் "நூல்தேட்டம்" என்ற பெயர்கொண்ட ஈழத்து எழுத்தாளர்களின் நூற்பட்டியலுக்காக மேற்கொண்டிருந்த வேளையில் அதிசயிக்கத்தக்க அவர்களது பங்களிப்புகள் பல வெளிச்சத்திற்கு வந்தன. பொருளாதாரக் காரணிகளின் பின்னணியில் எம்மவரால் மறக்கப்பட்டுவிட்ட இந்த யாழ்ப்பாணத்து மலாயன் பென்சனியர் சமூகத்தின் புகலிடத்து இலக்கியப் பங்களிப்பு, மலேசிய படைப்பிலக்கியத்தின் வரலாற்றிலிருந்து பிரிக்கப்பட முடியாததாகியுள்ளது. இன்றைய நிலையில் புலம்பெயர் வாழ்வியலில் அவர்களது இலக்கியப் பங்களிப்பு பற்றி நான் தேடித் தொகுத்த சில தகவல்களையாவது வாசகர்களுடன் பரிமாறிக் கொள்ள விரும்பினேன். அந்த விருப்பத்தின் விளைவே இக்கட்டுரையாகும்.

இது மலேசிய இலக்கியத்திற்கு எம்மவரின் பங்களிப்பைப் பற்றி தரும் முழுமையானதொரு ஆய்வல்ல. அத்தகையதொரு முழுமையான ஆய்வினை நோக்கிய ஒரு சிறு காலடித்தடம் என்று வேண்டுமானால் இக்கட்டுரை முயற்சியைக் கருதலாம். இக்கட்டுரையின் விரிவஞ்சி ஈழத்தமிழர்களின் முழுமையான இலக்கியப் பணிகள் விவரிக்கப்படவில்லை. தற்போது சிங்கப்பூரில் நிரந்தரப் பிரஜைகளாகி வாழும் ஈழத்தமிழர் சிலரின் இலக்கியப் பணியும் போதிய தொடர்பின்மையால் இக்கட்டுரையில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. ஈழத்தமிழரின் மலேசிய சிங்கை இலக்கியப் பணிகள் பற்றிய ஆய்வுகள் விரிவான முறையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற உணர்வினை இக்கட்டுரை நிச்சயம் வாசகர் மனதில் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

மலேசியாவில் ஈழத்தமிழர் புலப் பெயர்வு

சோழர் காலம் முதலாக (கி.பி 846- 1279) மலேசிய மண்ணில் தமிழரின் கால்பதிந்த வரலாற்றுத் தடங்கள் காணப்படுகின்ற போதிலும், 1786இல் பினாங்குத் தீவு ஆங்கியலேயரின் ஆட்சியின் கீழ் வந்தப் பிறகே தமிழர்களின் பாரிய குடியேற்றங்கள் அங்கு ஏற்பட்டுள்ளன. மலேசியக் குடியேற்ற வரலாற்றில் மலேசிய நாட்டை வளப்படுத்த நான்கு கட்டங்களில் அண்டை நாட்டு மக்களின் குடியேற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

முதலாவது கட்டக் குடியேற்றமாக மலேசியாவின் கரும்புத் தோட்டங்களிலும், பொதுப்பணித் துறைகளிலும் பணியாற்றவெனக் குடியேற்றப்பட்ட தொலோளர்கள் அடங்குகின்றனர். இரண்டாவதாக இந்தியாவிலிருந்து தமிழர்கள் இலங்கையின் மலையகத்திற்கு அழைத்து வரப்பட்டது போல கங்காணி முறையில் தமிழ் நாட்டின் கிராமங்களில் தொலோளர்களைத் திரட்டுவதன் மூலம் வேலைக்குக் கொண்டுவரப்பட்டவர்கள் அடங்குகின்றனர். இந்தியாவின் அக்காலக்கட்டத்தில் நிலவிய ஜமீன் அடக்க முறைகளினாலும் கொத்தடிமை கொடுமைகளினாலும் சாதீயத்தினாலும் பாதிக்கப்பட்ட இந்திய ஏழைத் தொலோளர்களுக்கு இந்தத் தொழில்சார் புலப்பெயர்வு மிகுந்த எதிர்ப்பார்ப்பைத் தந்திருந்தது. அப்போதைய நாகபட்டினம் துறைமுகம் இந்தத் தொலோளர்களை ஏற்றி வருவதற்கு மிகவும் பயன்படுத்தப்பட்ட இடமாகும்.

மூன்றாவதாக பிழைப்பு நாடிச் சுயமாக மலேசியாவுக்கு வந்தவர்கள் இடம்பெறுகின்றனர். மலேசிய மண் சற்று வளமுற்று வர்த்தகம் பெருகிய காலகட்டத்தில் செட்டியார்கள், முஸ்லிம் வணிகர்கள், சீக்கியர்கள் சிந்திக்காரர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என்ற பிரிவினரும் அதற்கும் பின்னர் சற்றே ஆங்கிலம் கற்றிருந்த இலங்கைத் தமிழர்களும் குடியேறினார்கள்.

இலங்கைத் தமிழர்களில் குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்களே இங்கு ஆங்கிலேயர்களால் குடியேற்றப்பட்டிருந்தனர். வண்ணார் பண்ணை, சுழிபுரம், வயாவிளான், புலோலி, வட்டுக்கோட்டை போன்ற பிரதேசங்களிலிருந்து பெருமளவில் இங்கு தபால், கச்சேரி, கல்வி, போக்குவரத்து, மருத்துவம் போன்ற அரசாங்க சேவைகளில் இடைநிலை ஊயேர்களாகப் பணியாற்றவென்று யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் ஆரம்பத்தில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்தியத் தொலோளிகளுக்கும், ஆங்கிலத் துரைமார்களுக்கும் இடையில் மொவேழி இணைப்பாளர்களாக இவர்கள் பணியாற்றியதாக வரலாறு உண்டு. மொழி வயோல் தமிழராக இருந்த போதிலும் மலேசியாவில் குடியேறிய இந்தியத் தமிழ் தொலோளர்களிடையே யாழ்ப்பாணத் தமிழர்கள் குட்டி அடக்குமுறையாளர்களாகவும் ஆங்கிலத் துறைகளின் செல்வாக்கைப் பெறும் நோக்கில் அவர்களின் நலன் பேணுபவர்களாகவுமே விளங்கி உள்ளனர். பின்னாளில் மலேசிய மண்ணில் மலர்ந்த இலக்கியங்கள் பலவற்றில் எம்மவர்கள் இத்தகைய குட்டி அடக்கு முறையாளர்களாகவே இனம் காணப்பட்டுள்ளார்கள்.

மலேசிய மண்ணில் மலர்ந்த கவிஞர்களுள் மூத்த முதுபெரும் மலேசியக் கவிஞர் ந.பழநிவேலு இயற்றிய 'கவிதை மலர்கள்’ (1947) என்ற நூலில் 'சித்தப் போக்கு’ என்னும் தலைப்பில் வரும் பாடல் அக்காலப் பாடு பொருளின் பட்டியலாகவே விளங்குகின்றது.

அயலான் ஒருவன் என்னை
'அடிமை இந்தியனே’ என்று அழைக்கும் பொழுதும்
அதே அடிமை இந்தியன் என்னைத்
'தாழ்ந்த குலத்தான்’ என்று சாற்றும் பொழுதும்
அடிமையின் பயங்கர தளையைக் காணும் பொழுதும்
... என் மனம் துடிக்கிறது!

வாணிநேசன் (க.சுப்பிரமணியம், 1971) எழுதிய 'நானும் வரமுடியாதுதான்’ என்ற சிறுகதை யாழ்ப்பாணத் தமிழர்கள் மேலாளர்களாக இருந்து செய்த கொடுமைகளுக்கு மற்றொரு இலக்கியச் சான்று.

அண்டை நாட்டு மக்களின் மலேசியக் குடியேற்றங்களில் நான்காவது கட்டம், 1802-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் போர்கைதிகளாகப் பிடிப்பட்ட தமிழர்களை பினாங்கு தீவை வளப்படுத்தும் நோக்குடன் ஆங்கிலேயர்கள் நாடு கடத்திய போது ஏற்பட்டது என்று , கர்னல் வெல்சின் 'இராணுவ நினைவுகள்’ என்ற நூலினை ஆதாரம் காட்டி மலேசிய எழுத்தாளர் பீர்.முகம்மது அவர்கள் குறிப்பிடுகின்றார். மருதுபாண்டியரின் மகனான துரைசாமி 73 கைதிகளுடன் பினாங்கு தீவுக்கு நாடுகடத்தப்பட்ட விபரங்கள் அதில் காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.

1921-ல் நடந்த ஒரு கணக்கெடுப்பின்படி அங்கு குடியேறிய தென்னிந்தியர்களில் 387,509 பேர் தமிழர்கள், 39986 பேர் தெலுங்கர்கள், 17790 பேர் மலையாளிகள் இருக்கக் காணப்பட்டனர். தோட்டப்புறங்களிலும் மற்றும் இரயில்வே சாலை மின்சாரம், நீர் விநியோகத் துறைகளிலும் தமிழர்கள் பெருமளவில் ஈடுப்படுத்தப்பட்டார்கள். இங்கும் ஆங்கில வழி கல்வி கற்ற யாழ்ப்பாணத் தமிழர்களும், மலையாளிகளும் தமிழர்களுக்கு அதிகாரிகளாகப் பணியாற்றும் நிலை உருவாகியது.

மலேசியாவில் தமிழ் நூல் வெளியீடு

மலேசிய தமிழ் மொழி கல்வி 1816இல் முதலில் பினாங்கிலேயே தொடங்கப்பட்டது என்று அறியப்படுகின்றது. மலேசிய மண்ணில் பிறந்த முதலாவது தமிழ் நூல் பட்டியல் என்ற வகையில் 1969 ம் ஆண்டில் மலாயாப் பல்கலைக்கழகத்தின் நூலக வெளியீடாக இராமசுப்பையா அவர்கள் தொகுத்திருந்த தமிழ் மலேசியானா (Tamil Malaysiana: a checklist of Tamil Books and Periodicals published in Malaysia and Singapore) என்ற நூல் அமைகின்றது. இந்நூலில் 77 பக்கங்களில் 1968 வரை வெளியான 401 தமிழ் நூல்களின் நூலியல் விபரங்களும், மலேசிய மண்ணில் முளைவிட்ட 271 தமிழ் சஞ்சிகைகள் (periodicals) பற்றிய பட்டியலும் காணப்படுகின்றன.

மலேசிய தமிழ் நூல்களின் வெளியீட்டு வரலாற்றை நாம் ஆராயும்போது, இன்றைய சிங்கப்பூரின் (1965 வரை மலேசிய எழுத்தாளர்களாக இனம் காணப்பட்டவர்கள்) தமிழ் படைப்பாளிகளையும் இணைத்தே பார்க்கவேண்டியதாக இருக்கின்றது. சிங்கப்பூரில் வாழ்ந்த தமிழர்களின் பங்கு மலேசியாவின் நூலியல் வரலாற்றில் பிரித்துப்பார்க்க முடியாதபடி இரண்டறக்கலந்து நிற்கின்றது.

வண்ணை அந்தாதி, வண்ணை நகர் ஊஞ்சல், சிங்கைநகர் அந்தாதி என்ற தலைப்பில் மூன்று சிறு நூல்களை யாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணையிலிருந்து புலம்பெயர்ந்த சி.ந.சதாசிவ பண்டிதர் சிங்கப்பூரில் எழுதி 1887இல் வெளியிட்டுள்ளார். இந்த நூல் பற்றிய செய்தியை இராம சுப்பையா தனது நூல்விபரப்பட்டியலில் பதிவு செய்திருக்கின்றார். மலேசியாவில் வெளிவந்ததாகப் பதிவுபெற்ற முதல் தமிழ் நூல் இதுவாகவே இன்னைய நிலையில் கருதப்படுகின்றது.

மலேசியாவின் முதல் தமிழ் சஞ்சிகை, பினாங்கிலிருந்து 1876இல் 'தங்கை நேசன்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. (மா.இராமையா, மலேசியத் தமிழ் வரலாற்றுக் களஞ்சியம்). இலங்கையிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் புலம்பெயர்ந்த தமிழர்களில் இலக்கியதாகம் கொண்ட சிலரின் கூட்டு முயற்சியினால் தங்கை நேசன் வளர்த்தெடுக்கப்பட்டது.

மலேசிய மண்ணில் வெளியான மற்றொரு ஆரம்பகால வெளியீடான யாழ்ப்பாணத்தவரான க.வேலுப்பிள்ளையின் 'சிங்கை முருகேசர் பேரில் பதிகம்’ என்ற நூலை அடையாளம் காண தமிழ் மலேசியானா உதவுகின்றது. சிங்கப்பூரில் 1893இல் வெளியான இச்சிறுநூல் 16 பக்கங்களைக் கொண்டது. சிங்கை முருகேசர் பேரில் பதிகம், யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை ஸ்ரீ வி.முருகேசபிள்ளையும் சிங்கப்பூரிலிருக்கும் சில நாட்டுக்கோட்டை செட்டிப்பிள்ளைகளும் கேட்டுக்கொண்டபடி, யாழ்ப்பாணம், வயாவிளான் க.வேலுப்பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டு, வட்டுக்கோட்டை ச.பொன்னம்பலம் பிள்ளை அவர்களால் சிங்கப்பூரில் தீனோதய வேந்திரசாலையில் ஜனவரி 1893இல் அச்சிடப்பட்ட நூலாகும். சிங்கப்பூரில் நாட்டுக்கோட்டைச் செட்டிகளால் தோற்றுவிக்கப்பட்ட முருகன் திருத்தலத்தின் பேரிற்பாடப்பெற்ற 10 பதிகங்களும், திருவூஞ்சல், கீர்த்தனம், பதம், ஜாவளி என்பனவும் இச்சிறுநூலில் அடங்கியுள்ளன.

மலேசியாவின் தமிழ் நூல் வெளியீட்டில் ஈழத்தமிழர்

இன்று இலங்கையின் இனவன்முறைக்கு முகம்கொடுக்கமுடியாது உலகெங்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நூல்வெளியீடுகள், தத்தமது வரலாற்றுப்பாரம்பரியப் பதிவுகளாகவும், மலரும் தாயகத்து நினைவுகளாகவும் பதியப்படுவது போலவே அன்று பொருளாதாரக் காரணிகளால் மலேயாவுக்குப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் தமது தேசநினைவுகளை முன் நிறுத்திய பல நூல்களை வெளியிட்டுள்ளனர். தாயகத்தின் நினைவுகளை இன்று கவிதைகளாக வடித்துப் பதிவாக்கும் புலம்பெயர் தமிழர் போன்றே தமது பாரம்பரிய நிலப்பரப்பில் கோயில்கொண்டெழுந்த ஆலயங்களின் மேற்பாடப்பெற்ற பாடல்களாக மலேயா மண்ணில் உருவாகிய ஆரம்பகால ஈழத்தமிழர்களின் நூல்கள் பல அமைந்திருக்கின்றன. சந்திரமௌலீசர் சகதம் என்னும் 'ஈழமண்டல சதகமும் உரையும்’ என்ற மற்றொரு நூலையும் இங்கு உதாரணத்திற்குத் தரலாம். ம.க.வே.பிள்ளைப் புலவர் அவர்களது மூலநூலுக்கு, ந.சபாபதிப்பிள்ளை அவர்கள் உரை எழுதி, கோலாலம்பூர், ச. இரத்தின சபாபதி அவர்களால் 1951இல் கோலாலம்பூர், இந்தியன் அச்சியந்திரசாலையில் 202 பக்கங்களில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

சைவோபநிஷத்து, சிவாகமம், தக்ஷிணகைலாச மான்மியம், வான்மீகம் முதலிய சம்ஸ்கிருத நூல்களின் உதவியுடன் தேவாரம், திருவாசகம், திருமந்திரம், தலபுராணம், முதலாய திராவிடநூல்களில் மேற்கோள்களைப் பயன்படுத்தி ஈழமண்டலத்தின்மீது பாடப்பெற்ற சதகமும் அதற்கான உரையும் இந்நூலில் அடங்கியுள்ளது. 'கும்பழாவளை விநாயகர் தோத்திரப் பிரபந்தத் திரட்டு’ என்ற மற்றொரு நூல் யாழ்ப்பாணத்து க.வே..கந்தையாபிள்ளை அவர்களால், பினாங்கு: கணேச அச்சியந்திரசாலையில் 1933இல் அச்சிடப்பெற்று 50 பக்கங்கள் கொண்ட நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

சைவசித்தாந்தம் முதலான இந்து நெறிகளில் தீவிர பிடிப்புள்ளவர்களாக அங்கு குடியேறிய ஈழத்தவர்கள் இருந்துள்ளனர். மலேயா மண்ணில் தம்மை உயர்குலத்து சைவ வேளாளர்களாக அடையாளப்படுத்துவதற்கு இத்தகைய இலக்கியப்பதிவுகள் அவர்களுக்குத் தேவைப்பட்டுள்ளது. 'ஆன்மநாயகன் அருள்வேட்டல்’ என்ற நூல் சாஸ்திரி ஏ.ஆறுமுகனார் அவர்களால் கிள்ளானில் வெளியிடப்பட்டுள்ளது. முதற்பதிப்பு 1941இல் கண்ட இந்நூலின் 2ஆவது பதிப்பு 1984இல் செலாங்கூரில் வெளியிடப்பட்டுள்ளது. சிங்கப்பூர் 'தமிழரசு’ பத்திரிகையின் ஆசிரியராயிருந்தவரும், இயற்றமிழாசிரியருமான யாழ்ப்பாணம் ஏ.ஆறுமுகனார் அவர்கள் இந்நூலாசிரியர், இந்நூலிலுள்ள பாடல்கள் தமிழ்மறையான தேவார திருவாசகங்களிலிருந்து தொகுக்கப்பெற்றவை. அகச்சுத்தி, புறச்சுத்தி, புறப்பாடு, தேற்றரவு, மயானம், தீயணைவித்தல், அறவுரை என்று ஏழு பகுப்பில் 84 பாடல்களுடன் இந்நூல் வெளிவந்துள்ளது.

சைவசமய சார சங்கிரகம் என்ற நூல் தி.க.கந்தையாபிள்ளை அவர்களால் கோலாலம்பூர்: மலாயன் அச்சுக்கூடத்தில் தை 1941இல் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், புலோலி ஸ்ரீலஸ்ரீ தில்லைநாத நாவலவர்களின் மருகரும் மாணாக்கருமாகிய தமிழ்ப்பண்டிதர் தி.க.கந்தையாபிள்ளை அவர்கள் மலாயாவிலிருந்து சேர்.பொன்.அருணாசலம் அவர்களின் ஞாபகர்த்தமாக அர்ப்பணம் செய்து வெளியிட்டுள்ள நூல் இதுவாகும். பரம ஐஸ்வர்யங்களாகிய விரத வரலாறுகளின் இலக்கணங்களையும், வருஷப்பிறப்பு முதலிய நற்கருமங்களையும் இன்னும் சில சமய, வரலாற்று விளக்கங்களையும் இந்நூல் வழங்குகின்றது.'பன்மணிக் கோவை’ என்ற மற்றொரு நூல் ம.ஆறுமுகம் என்பவரால் சிங்கப்பூர்: இலங்கைத் தமிழர் சங்கத்தின் வாயிலாக செப்டம்பர் 1937இல் 144 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் மனநோயாளர் வைத்தியசாலைத் (Mental Hospital) தலையெழுத்தாளர் ப.கந்தையா அவர்களுக்குச் சமர்ப்பணமாக்கப்பட்ட இந்நூல், பண்டைத் தமிழகத்தின் பழம்பெருமை தொடங்கித் தமிழ் இலக்கியம், தமிழறிஞர் தம் செம்மொகேள், அவற்றால் இந்தியவுலகமடைந்த நலம், சைவசித்தாந்தச் சிறப்பு, கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களின் சாரம், சமயங்களின் சமரச நோக்கம், சாதி மற்றும் சீதனக் கொடுமைகள், மகாத்மா காந்தி முதலான பெரியோர் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள், நட்பு, நன்றி, இல்லற மாண்பு ஈறாகப் பல்வேறு தலைப்புகளில் பல கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

Analysis of the Unseen என்ற ஆங்கிலத் தலைப்புடன் வெளியாகியுள்ள தத்துவ ஆராய்ச்சி என்ற வி.எஸ்.ஸ்ரீபதி அவர்களது நூல் சிங்கப்பூர் M.Mohamed Dulfakir, Book Seller வாயிலாக 1933இல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் நூலாசிரியர் தனது தாயார் மாது ஸ்ரீ பாலாம்பிகை அம்பாள், செல்வாம்பாள் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்யப்படுவதாக அமைந்துள்ளது. இலங்கைத் தமிழர்களிடையே காணப்படும் சரமகவி என்ற கல்வெட்டுப் பாரம்பரியத்தின் மற்றொரு பரிமாணமாக இந்நூல் அமைந்திருப்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது.

நூலாசிரியர், இலங்கையில் யாழ்ப்பாணம். வண்ணார்பண்ணை களட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தொழில்வாய்ப்பின் நிமித்தம் புலம்பெயர்ந்து மலேயாவுக்குச் சென்று குடியேறியவர். இவர் எழுதிய 'தேகத்தைப் பக்குவமுடைத்தாக்கல்’ என்ற மற்றொரு நூலும் இங்கு குறிப்பிடத்தகுந்தது. கிள்ளானில் 1933இல் வெளியிடப்பட்ட இந்த நூலில் , மலேயாவில் பத்துபகாட் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் சங்கத்தில் ஸ்ரீபதி அவர்கள் செய்த உடற்பயிற்சி பற்றிய உபந்நியாசம், தேகாப்பியாச விளக்கப்படங்களுடன் 38 பக்கங்களில் தரப்பட்டுள்ளது. தங்களது மேடைப்பேச்சுக்களை, உரைகளை நூலுருவில் பதிவாக்குவதில் ஈழத்தமிழர்கள் மலேயாவில் வாழ்ந்திருந்த வேளையில் அக்கறை கொண்டிருந்திருக்கிறார்கள் என்று நம்பமுடிகின்றது.

முன்னைய நூல் போன்றே, 'பார்ப்பது எதை’ என்ற மற்றொரு நூலும் இதற்கு உதாரணமாக அமைகின்றது. கா.இராமநாதன் அவர்கள் எழுதி, கோலாலம்பூரில் ஏப்ரல் 1960இல் வெளியிடப்பட்ட இந்நூலில், புதுவயல் சரஸ்வதி சங்கத்தின் வெள்ளிவிழாவின்போது விஞ்ஞானி சா.கிருஷ்ணன் தலைமையிலும், யாழ்ப்பாணம், வறுத்தளைவிளானில் இடம்பெற்ற விசேட கூட்டமொன்றில் பிரம்மஸ்ரீ சி.கணேசையர் தலைமையிலும் 'பார்ப்பது எதை’ என்ற தலைப்பில் கா.இராமநாதன் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவுகள் இரண்டும் இடம்பெறுகின்றன.

சிவயோகத்தில் அமர்ந்து சைவாகமங்களின் பொருட்களை அடக்கி ஆண்டுக்கொன்றாகப் பாடியருளிய திருமூலரின் திருமந்திரப் பாடலொன்று விரிவாகப் பல உதாரணங்களுடன் இவ்வுரையில் விளக்கப்பட்டுள்ளது. அரிய மானிடப் பிறவியைப் பெற்ற நாம் பல இன்பதுன்பங்களை அனுபவித்துக்கொண்டு ஐம்பொறிகளில் ஒன்றாகிய கண்களினால் நல்லதும் கெட்டுதுமான பல காட்சிகளைப் பார்க்கின்றோம். அப்படிப் பார்ப்பதில் பார்க்கத்தக்கது எது என்பதை ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடாக இக்கட்டுரை தருகின்றது.

ஆன்மீகம், இலக்கியங்களுடன் மாத்திரம் அவர்களது நூல்வெளியீடுகள் நின்றுவிடவில்லை. மலேயாவின் பண்டைய, சமகால வரலாறுகள் தமிழில் பதியப்படவேண்டும் என்ற உரத்த சிந்தனை கொண்டவர்களாகவும் ஈழத்தமிழர் அந்நாளில் புலம்பெயர்ந்து வாழ்ந்திருந்த வேளையில் விளங்கியுள்ளனர். பண்டைய ஈழத்தின் வரலாறு இலக்கியங்களாகவன்றி, அறிவுபூர்வமாக, முறையாகப் பதியப்படாத ஏக்கம் மலேயாவின் சமகால வரலாற்றுப் பதிவின்மேல் அவர்களின் அக்கறை தீவிரமாக உதவியிருக்கலாம்.

'மலாய மான்மியம்’ என்று மலாயாவின் வரலாறு கூறும் முதல் தமிழ் நூல் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைச் சேர்ந்த சரவணமுத்துப்பிள்ளை முத்துத் தம்பிப்பிள்ளையவர்களால் சிங்கப்பூர் விக்டோ ரியா அச்சகத்தில் அச்சிடப்பட்டு மே 1937இல் முதலாவது பாகம் 247 பக்கங்களிலும், ஜனவரி 1939இல் இரண்டாவது பாகம் 172 பக்கங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன.

பிரித்தானியாவின் ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் மகுடாபிஷேக (Coronation) ஞாபகார்த்தமாக இந்திய இலங்கை மக்களின் சார்பாக ஆசிரியரால் வெளியிடப்பட்ட முதலாவது பாகத்தில், நூலாசிரியர் தான் மலாய் நாடுகள் பலவும், சேய்கூன், கம்போஷா, அங்கோர்வாட், சீயம், யாவா முதலிய நாடு முழுவதும் திரிந்து திரட்டிய குறிப்புக்களையும், மலாய் தொடர்பாக இதுவரை வெளியான சுமார் 16 நூல்களையும் ஆராய்ந்து இத்தொகுப்பினை உருவாக்கியுள்ளார். முதற்பாகத்தில் முதல் 55 பக்கங்களிலும் மலாயாவின் வரலாறு பதிவுக்குள்ளாகியுள்ளதுடன், மலாயா வரலாற்றில் பதியப்படவேண்டும் என ஆசிரியர் கருதிய பல்வேறு பிரமுகர்களது புகைப்படங்கள் சகிதம் எஞ்சிய அவர்வர்களது வாழ்க்கைக் குறிப்பும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. ஆறாம் ஜார்ஜ் மன்னரின் சாதகமும், நூலாசிரியரின் சாதகமும், அவற்றின் பலன்களும், ஆதாரக் குறிப்புகளுடன் மலாயாவில் வாழும் இந்திய இலங்கைப் பிரமுகர்களின் புகைப்படங்களுடனான அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. முதலாம் தொகுதியின் 1-55ஆம் பக்கம் வரை விரிந்த மலாயாவின் வரலாற்றுப்பதிவின் தொடர்ச்சி, இந்நூலின் இரண்டாம் தொகுதியின் 6-32 பக்கங்களில் இடம்பெறுகின்றன. 33 ஆம் பக்கத்திலிருந்து 168 ஆம் பக்கம் வரை சிங்கப்பூர் மலாயாவில் பிரபல்யமான மேலும்பல இலங்கை, இந்திய பிரமுகர்களின் உருவப்படங்களுடன் அவர்களது சீவிய சரித்திரக்குறிப்புகள் காணப்படுகின்றன. இவ்விரு தொகுதிகளும் பிரித்தானிய நூலகத்தில் இன்று பார்வையிடப்படக்கூடிய நிலையில் பேணப்பட்டும் வருகின்றன.

'யாழ்ப்பாணக் குடியேற்றம்: பாகம் 1’ என்ற தலைப்பில் சிவானந்தன் என்பவர் 1933இல் எழுதி, கோலாலம்பூர்: ஆர்ட் பிரின்டிங் வேர்க்ஸ் வயோக அச்சிட்டு வெளியிட்ட நூலொன்று பற்றிய தகவலும், இராம சுப்பையாவின் தமிழ் மலேசியானாவில் காணக்கிடைக்கின்றது.

மலேசியாவில் படைப்பிலக்கியம்

மலேசியாவில் தமிழ் இலக்கியம் கிட்டத்தட்ட 118 ஆண்டுகளை இன்று எட்டிப்பிடித்திருக்கின்றது. இந்த நாட்டில் குடியேறிகளாக கொண்டுவரப்பட்ட காலத்திலேயே தங்களுடைய மூட்டை முடிச்சுகளுடன் கப்பலேறிய தமிழ் மக்கள் தத்தமது நாட்டு இலக்கிய உணர்வுகளையும் சேர்த்துக் கட்டிக் கொண்டுதான் வந்தார்கள்.

மலேசிய தமிழ் நாவல் இலக்கிய வளர்ச்சியில் கால இடைவெளிகள் ஏற்பட்டுள்ளதை மலேசிய இலக்கிய ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த இடைவெளிகள் இரு முறை ஏற்பட்டுள்ளன. 1918 முதல் 1931 வரை 12 ஆண்டுகளும், 1938 முதல் 1948 வரை 10 ஆண்டுகளும் இலக்கியத்திலும், நூல்வெளியீட்டு முயற்சிகளிலும் இருண்ட ஆண்டுகளாகவே காணப்படுகின்றன. இவற்றுக்கு அன்றைய காலத்தில் நிலவிய போர்க்காலச் சூழலே காரணம் என்று குறிப்பிடப்படுகின்றது. இரண்டாம் உலக மகாயுத்தம் மலேசிய மண்ணில் ஜப்பானியரின் ஆதிக்கத்தை தோற்றுவித்தது. அக்காலக்கட்டம் இலக்கியத்துறைக்கு இருண்டதொரு காலகட்டமாக அமைந்துவிட்டது. சப்பானியரின் பிரச்சாரத்திற்காக ஓரிரு ஏடுகள் அக்காலகட்டங்களில் நடத்தப்பட்டன. சீரான வளர்ச்சி கண்டு வந்த கல்வி, தொழில், பொருளாதாரம் அனைத்தும் 5 வருடகாலப் பின்னடைவைக்கண்டு தேக்கமடைந்தது. இக்கால கட்டத்தில் யாழ்ப்பாணத் தமிழர்களில் பெரும்பங்கினர் ஓய்வுபெற்று தாயகம் நோக்கிய தமது மீள்குடியேற்றத்தை மேற்கொண்டனர். சிலர் மட்டுமே தம்மை மலேசியப் பிரஜைகளாக்கிக் கொண்டு மலேசிய மண்ணிலேயே தங்கி விட்டனர்.

31.8.1957இல் மலேசியா ஆங்கிலேய காலனித்துவத்திலிருந்து விடுதலை பெற்றது. விடுதலைக்குப் பின் மலேசிய இலக்கியம் வீறுகொண்டெழுந்து பன்முக வளர்ச்சி கண்டது. இதற்குப் பின்னரே மலேசியத் தமிழர்கள், மலேசியாவே தங்கள் நாடு என்ற உணர்வுடன் தங்களுக்கே உரித்தான, தனித்துவமான மலை இலக்கியத்தைப் படைக்கத் தொடங்கினர். இந்திய இலங்கைத் தமிழர்களின் ஆதிக்கம் அங்கு படிப்படியாகக் குறைந்தது. பல்வேறு வாழ்வியல் பிரச்சினைகளையும் இயற்கை, காதல், இனவுணர்வு, மொழியுணர்வு, நாட்டுப்பற்று, போன்றனவற்றையும் பாடுபொருளாகப் புனைந்து மலேசியத் தமிழ்க் கவிதைகள், நாவல்கள், உரைநூல்கள், அறிவியல் நூல்கள் என்று பெருகத் தொடங்கின. இன்றுவரை வீறுடன் மண்ணின் இலக்கியங்களாக வளர்ச்சி கண்டு வருகின்றது.

ஆரம்பகால இலக்கியத்தில் ஈழத்தமிழர்

ஆரம்பகால மலேசிய இலக்கியங்களில் ஈழத்தவரின் பங்கு மலேசிய இலக்கிய வரலாற்றுடன் பிரிக்கமுடியாதபடி பின்னிப்பிணைந்துள்ளது. 1910ஆம் ஆண்டுக்கும் 1920ஆம் ஆண்டுக்குமிடையே மலேசியா தனது முதல் நாவலைப் பெற்றுள்ளது. இக்காலக்கட்டத்தில் இரு நாவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் வெங்கடரத்தினம் அவர்கள் எழுதிய கருணாசாகரன் அல்லது காதலின் மாட்சி என்ற நாவல் 1917இலும், புலோலியூர் க.சுப்பிரமணியம் என்ற ஈழத்தமிழர் எழுதிய பாலசுந்தரம் அல்லது சன்மார்க்க ஜெயம் என்ற நாவலின் இரதண்டாம் பாகம் 1918 இலும் வெளியாகின. மலேசிய நாவல் இலக்கியத்தின் முன்னோடியாகக் காணப்படும் இரண்டு நூல்களும் இவ்விரு பாகங்களைக் கொண்டன.

ஈழத்தவரின் நாவலின் இரண்டாம் பாகமே 1918இல் வெளியாகியுள்ளமை இங்கு அவதானிக்கத்தக்கது. இதன் முதலாம்பாகம் பற்றிய தகவல் இல்லாதிருப்பதால், 1917இல் வெளியானதும் வெங்கடரத்தினம் அவர்கள் எழுதியதுமான 'கருணாசாகரன் அல்லது காதலின் மாட்சி’ என்ற நாவலே முதல் நாவலாக இன்றுவரை வரலாற்றில் பதிவில் உள்ளது. என்றாவது இந்த நாவலின் முதற்பாகம் ஆவணக்காப்பகங்களில் இருந்து எமது கண்களை எட்டினால், மலேசிய தமிழ்நாவல் இலக்கிய வரலாறு மீளவும் திருத்தி எழுதப்படலாம்.

புலோலி க.சுப்பிரமணியம் அவர்களால் எழுதப்பட்ட 'பாலசுந்தரம் அல்லது சன்மார்க்க ஜெயம்’ என்ற நாவலின் இரண்டாம் பாகம், பினாங்கு, சி.அரிகிருஷ்ண நாயுடு அவர்களால் 1918இல் பினாங்கு, எட்வார்ட் பிரஸ் வாயிலாக 183 பக்கங்கள் கொண்டதாக அச்சிடப்பட்டிருந்தது. மலேசியாவில் Krian Licensing Boardஇல் அங்கத்தவராயிருந்த ஆசிரியர் யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்தவர். பின்னாளில் புலம்பெயர்ந்து மலாயாவுக்குச் சென்றவர். மலேசிய தமிழ் நாவல் இலக்கியம் தொடக்க காலத்திலேயே சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள் பொதிந்தனவாக அமைய ஆரம்பித்துவிட்டன என்பதற்கு இந்நாவல் எடுத்துக்காட்டாகவுள்ளது. ஒழுக்கம் நேர்மை ஆகியவற்றால் வரும் உயர்வைப்பற்றி விளக்கும் இந்நாவலின் இரண்டாம் பாகம் 22ஆம் அத்தியாயத்திலிருந்து 36ஆம் அத்தியாயம் வரை கொண்டுள்ளது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மலாயா நாடு இந்நாவலின் கதைக்களமாகின்றது. பிரித்தானியர் ஆட்சி, கோலாலம்பூர் நகர உருவாக்கம், கிறிஸ்தவ சமயப்பரம்பல், இலங்கை- இந்தியத் தமிழர்களுக்கு இடையிலான பிணக்குகள் முதலிய பல வரலாற்றுத் தகவல்கள் கதையில் விதைக்கப்பட்டுள்ளன. இந்நாவலின் தொடர்ச்சி 'நீலாக்ஷி அல்லது துன்மார்க்க முடிவு’ என்ற மற்றொரு நாவலாக (1923) அமைந்துள்ளது. மலேசிய தமிழ் நாவல் இலக்கிய வரிசையில் இடம்பெறும் இந்நாவல் இலங்கைக்கும் மலேசியாவுக்கும் தமிழ் இலக்கியப் பாலமாக அமைந்துள்ளது.

சாம்பசிவம் ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ்சியம் என்ற நாவல் அ.நாகலிங்கம் அவர்களால் 1927இல் எழுதப்பட்டது. இது 343 பக்கம் கொண்டது. 29.02.1901இல் பிறந்த இந்நூலாசிரியர், 1917இல் மலேயாவுக்குச் சென்று அங்கு கோலாப்புலாவில் 22 வருடங்கள் திறைசேரியில் தலைமை இலிகிதராக (Clerk)பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனது 26ஆவது வயதில் எழுதிய நாவல் இதுவாகும். மலேயாவில் இவர் உத்தியோகம் பார்த்த கோலப்புளாவில் முழுவதும் விற்றுத் தீர்க்கப்பட்ட நாவல் இதுவாகும். கோரகாந்தன் அல்லது தொன்மலாயாகிரியில் வட இலங்கைத் துப்பாளி. என்ற நாவல் மு.சீ.செல்வத்துரை அவர்களால் எழுதப்பட்டு கோலாலம்பூர் பத்து பகாட், எம்.எஸ்.சுப்பபையா அவர்களால் 1934இல் 326 பக்கம் கொண்ட நூலாகப் பதிப்பிக்கப்பட்டது. ஈழத்தமிழரின் இந்நாவல் துப்பறியும் நாவலாக மட்டுமல்லாது, வாசர்களுக்கு நல்ல அறிவுரை கூறுவதாகவும் எழுதப்பட்டுள்ளது. மலேசிய தமிழ்ச்சமுதாயத்தில் தென்னிந்திய சீர்த்திருத்தவாதிகள்ளின் கருத்துக்கள் ஊடுருவியிருந்த காலகட்டத்தில் உருவான நாவல் இது. கொள்ளையர் கூட்டமொன்றைச் சேர்ந்த கோரகாந்தன் என்பவனைப் பிடிக்க முயற்சிக்கும் துரைராசா என்ற துப்பறிவாளர் பற்றிய கதை. யாழ்ப்பாணத்திலிருந்து மலாயாவுக்குப் புலம்பெயர்ந்து சென்ற நூலாசிரியர் இலங்கைத் தமிழர் மலாயாவுக்குப் புலம்பெயர்ந்து சென்ற நூலாசிரியர் இலங்கைத் தமிழர் மலாயாவுக்கு வந்து குடியேறியதையும், இவ்விரு நாடுகளுக்குமிடையே இருந்த தொடர்புகளையும் சமகாலத்தில் மலாயாவில் வாழ்ந்த மலாய்க்காரர் பற்றியும் இந்நாவலில் விபரித்திருக்கின்றார்.

'நேசமலர் அல்லது கற்றோரின் கனா' என்ற மற்றொரு நாவல், செ.சிவஞானம் அவர்களால் சிங்கப்பூர் ஈஸ்டேர்ன் பிரிண்டிங் வேர்க்ஸ், வாயிலாக 1936 இல் 110 பக்கம் கொண்டதாக வெளியிடப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் சுழிபுரத்திலிருந்து மலேயாவுக்குப் புலம்பெயர்ந்த நூலாசிரியர் எழுதிய சமூகநாவல் இதுவாகும். யாழ்ப்பாணத்தினை கதைக்களமாகக் கொண்டு அமைந்துள்ளதுடன், அக்காலகட்டம் வரை மலேசிய தமிழ் நாவல் வரலாற்றில் உண்மைக் காதலை நயம்பட உரைப்பதுடன் காதல் உணர்வை ஆழமாகவும் வேகமாகவும் வெளிப்படுத்தும் சிறந்த நாவல் என்று புகழப்பெற்றது. மணியம் மகாலிங்கர் என்பவர் தனது மகள் நேசமலரை விஜயரத்தினம் என்ற வக்கீலுக்கு 70000 ரூபா வரதட்சணை வழங்கித் திருமணம் முடித்துவைக்க நிச்சயிக்கிறார். நேசமலரோ வக்கீலின் துர்நடத்தைகளை அறிந்து அவரை ஒதுக்கி ஏழைத் தொலோளியின் மகனான நேசகமலனை பலத்த எதிர்ப்புக்கிடையே மணம் முடிக்கிறாள். வரதட்சணை, கல்வி, ஆலயங்களில் உயிர்ப்பலி, விலைமகளிர், அரசியல், சாதப்பிரச்சினை என்று பல செய்திகளை இந்நாவலில் தூவியிருக்கிறார்.

'அழகானந்த புஷ்பம்’ என்ற நாவல், மற்றொரு இலங்கையரான க.டொமினிக் அவர்களால், சிங்கப்பூர் விக்டோ ரியா பிரஸ் வாயிலாக 1936 இல் வெளியிடப்பட்டது.

பழமையில் ஊறிக்கிடக்கும் கிராமவாசிகளுக்கும், நாகரீக முதிர்ச்சிபெற்ற நகரப்புறவாசிகளுக்கும் இடையே ஏற்படும் சில சிக்கல்கள் இந்நாவலில் சித்தரிக்கப்படுகின்றன. உயர்கல்வியும் ஆங்கில மோகமும் கொண்ட செல்வத்துரையின் வாழ்வு அவனது துர்நடத்தை காரணமாக திசைமாறிச் சீரவேதாகவும், ஏழைக்குடியானவனான அழகானந்தன சுயமுயற்சியால் வாழ்வில் முன்னேறிச் செல்வதாகவும் கதை நகர்த்தப்படுகின்றது. சுகாதாரம், கல்வி, அறம், சமுதாய இன்னல்கள், பெண்களின் நிலை, ஆங்கில மோகம் போன்றவற்றைப் பற்றிய அறிவுரைகள் நாவலின் கதாபாத்திரங்களின் வயோக உபதேசிக்கப்படுகின்றது. விடுதலைக்கு முந்திய மலேசியத் தமிழ் நாவல்களிலேயே இந்நாவல் ஒன்றில் தான் ஏராளமான பாடற் பகுதிகளும் பழமொகேளும் கையாளப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழோடு இலக்கியத் தமிழும் இந்நாவலில் உரையாடல்களாகின்றன. இராமலிங்கம் என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக அன்றைய மலாயாவில் வாழ்ந்த இந்தியத் தொலோளர்களின் நிலைகள் விளக்கப்பட்டுள்ளன. இது இந்நாவலுக்கு மலேசிய மண்வாசனையத் தந்துள்ளது. மற்றெந்த இலக்கியத்திலும் இல்லாதவகையில், இந்நாவலில் ஆசிரியர் யாழ்ப்பாணத்துத் தமிழர்களை மலாயா வராது தடைசெய்து தத்தமது சொந்த ஊரிலிருந்தே நல்வாழ்வு வாழும்படி அறிவுறுத்துகின்றார். இது மலேயாவுக்கான யாழ்ப்பாணத்தவரின் புலம்பெயர்வில் திருப்புமுனைக் காலக்கட்டம் என்று சமூகவியலாளர்கள் கருதுகின்றனர்.

மலேசிய மண்ணில் விளைந்த ஈழத்தவரின் மற்றொரு நாவலான 'சயம்புநாதனும் சன்னாசியாரும் அல்லது அறிவாளி’ என்ற நாவல் பற்றிய குறிப்பொன்றை மலேசிய இலக்கிய வரலாற்று நூல்களில் காணமுடிகின்றது. 1935இல் கதிரேசம்பிள்ளை அவர்கள் எழுதியதாகக் கருதப்படும் இந்நாவலும், ஏற்கெனவே குறிப்பிட்ட, 'பாலசுந்தரம் அல்லது சன்மார்க்க ஜெயம்’ முதலாவது பாகம் போன்றே காணக்கிடைக்காத நூலாகிவிட்டது.

மலேசிய மண்ணுக்குரிய இலக்கியத்தின் மலர்வு

மலேசிய இயக்கத்தின் மீள்பிறப்புக் காலமாக 1946 கருதப்படுகின்றது. பிரித்தானிய-ஜப்பானிய போர் அனர்தங்களிலிருந்து மலேசிய மக்கள் மீண்டு மூச்சுவிட ஆரம்பித்த காலகட்டத்தின் தொடக்கம் இதுவாகும். இந்தக்கால கட்டத்தில் ஈழத்தமிழராகத் தம்மை இனம்காட்டி இலக்கியம் படைத்தவர்கள் தாய்நாடு திரும்ப, மலேசிய மண்ணின் இலக்கியத்தில் ஈழத்தமிழரின் பங்கு கணிசமாகக் குறைய ஆரம்பித்தது. அந்த இடத்தை, மலேசிய மண்ணின் மைந்தர்களான மா.இராமையா, சி.வீ.குப்புசாமி, சுப.நாராயணன், பைரோஜி நாராயணன், பி.ஏ.கிருஷ்ணதாசன், அ.இராமநாதன் போன்றோர் நிரவி முழுமையான மண்வாசனை கொண்ட மலேசிய இலக்கியங்களை மலேசிய மண்ணைக் கதைக்களனாகக் கொண்டு படைக்க ஆரம்பித்தனர். அவர்களுடன் இன்று ரெ.கார்த்திகேசு, சை.பீர்.முகம்மது, மு.அன்புச்செல்வன், முல்லை ராமையா, வே.சபாபதி, டாக்டர்.சண்முகசிவா, சி.முத்துசாமி என்ற படையணி இலக்கியத்தை நகர்த்திச் செல்கின்றன.

மலேசியாவில் ஈழத்தமிழர்களின் தற்கால இலக்கியப் பணி

மேற்சொன்ன மலேசியத் தமிழ் இலக்கியகர்த்தாக்களிடையே, ஈழத்தமிழர்களைப் பிரித்து நோக்கும் வாய்ப்பு இல்லாத போதிலும், தவத்திரு தனிநாயகம் அடிகளின் தமிழாய்வுப்பணியின் பங்களிப்பை அங்கு போற்றிவரும் பாங்கு காணப்படுகின்றது. மலேயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் முன்னாள் தலைவர்களாகவிருந்த இரண்டாம் தலைமுறை ஈழத்தவர்களான தேவபூபதி நடராஜா, திலகவதி போன்றவர்கள் அறிவார்ந்த படைப்பிலக்கியப்பணிகளையும், ஆன்மீகத் துறை வெளியீடுகளையும் காலத்திற்குக் காலம் முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். இன்று மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையில், ஈழத்து இலக்கியங்களுக்கென்றொரு தனியான இடம் இந்திய ஆய்வியல் துறைத் தலைவராகவுள்ள பேராசிரியர் வே.சபாபதி அவர்களின் நேரடிப் பொறுப்பில் உள்ளது. (Professor Dr.V.Sabapathy, e-mail: sabavenu@um.edu.my)

முதலாவது மலேசிய திருமந்திர மாநாடு பற்றிய தொகுப்பு நூலொன்று தேவபூபதி நடராஜா அவர்களால் கோலாலம்பூர், மலேசிய இந்து சங்கத்தின் வாயிலாக மார்ச் 2000 இல் வெளியிடப்பட்டிருந்தது. 118 பக்கம் கொண்டதும், வண்ணத் தகடுகள் நிறைந்ததுமான இம்மலரில், மலேசியா, கோலாலம்பூரில் 10.3.2000 தொடக்கம் 12.3.2000 வரை நடந்தேறிய முதலாவது மலேசியத் திருமந்திர மாநாட்டு நிகழ்வுகள், கட்டுரைகள் அடங்கியிருந்தன.

மாத்தாளை சோமுவின் பங்களிப்பு

இலங்கையின் பிரபல மலையக இலக்கியவாதியான மாத்தாளை சோமு அவர்கள் தற்போது அஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருபவர். அவரது இலக்கியப் பங்களிப்பு இன்றைய காலகட்ட மலேசிய இலக்கியத்துடன் இணைந்ததாக அமைந்துள்ளது.

`மாத்தாளை முதல் மலேசியா வரை’ என்ற அவரது பிரயாண இக்கிய நூல்.. திருச்சி தமிழ்க்குரல் பதிப்பகத்தின் வாயிலாக உறையூரில் மார்ச் 2000 வெளியிடப்பட்டிருந்தது. 126 பக்கங்கள் கொண்ட இக்கட்டுரைத் தொடரில் மலேசிய நாடு பற்றியும், மலேசிய மக்கள் பற்றியும், மலேசியத் தமிழர்களின் கலை இலக்கிய பத்திரிகைத்துறை முயற்சிகள் பற்றியும் பல அரிய தகவல்கள் திரட்டித் தரப்பட்டுள்ளன. தனது மலேசிய இலக்கியப்பயணத்தின் போது கண்டு கேட்டு அனுபவித்த தகவல்களின் தொகுப்பாக இப்பயணக்கட்டுரை அமைந்திருந்தது.

ஏற்கெனவே மலேசிய தமிழ் உலகச் சிறுகதைகள் ,என்ற தலைப்பில் மாத்தாளை சோமு அவர்கள் 1995ஆம் ஆண்டு ஒரு நூலை வெளியிட்டிருந்தார். 14 மலேசிய தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் இதில் அடங்கியிருந்தன. பின்னிணைப்பாக மா.இராமையா, இலங்கை-குன்றின் குரல் டிசம்பர் 1992 இதழுக்காக எழுதிய மலேசிய தமிழ் இலக்கியம்- ஒரு நினைவோட்டம் என்ற கட்டுரையும் இடம்பெற்றிருந்தது. மலேசிய இடைநிலைப் பள்ளிகளில் பாடப்புத்தகமாகவும் வைக்கப்பட்ட சிறப்பு இந்நூலுக்கு உண்டு.

அண்மையில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தனி நூலாகவும் வெளியிட்டிருந்தார். இதன்மூலம் சமகால மலேசிய மண்ணின் படைப்பிலக்கிய கர்த்தாக்களின் மண்வாசனைமிக்க படைப்புக்கள் சர்வதேச அரங்கில் எடுத்துச் செல்லப்படும் வாய்ப்புக்கிட்டியுள்ளது.

மலேசிய நூல்தேட்டம்

இலண்டனில் 1997முதல் வெற்றிகரமாக வெளிவந்துக் கொண்டிருக்கும் தேசம் என்ற கலை இலக்கிய சமூகவியல் சஞ்சிகையின் வெளியீட்டாளர்களின் அனுசரணையுடன், 05.04.2003 அன்று இலண்டன் Stradford Library Hallஇல் மலேசிய தமிழ் இலக்கிய நிகழ்வும், மலேசிய தமிழ் நூல்கண்காட்சியும் நடத்தி வைக்கப்பட்டன. மலேசிய மண்ணுக்கு வெளியே ஐரோப்பிய தேசமொன்றில் இடம்பெற்ற முதலாவது மலேசிய இலக்கிய விழா இதுவேயாயும். ஈழத்தமிழர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில், பல மலேசிய எழுத்தாளர்களின் தொடர்பு ஐரோப்பிய ஈழத்தமிழர் எழுத்தாளர்களுக்கும், இலக்கியப் பிரமுகர்களுக்கும் இந்நிகழ்வின்போது கிட்டியது. அத்தருணம், மலேசியத் தமிழ் இலக்கியம்: தேசம் சிறப்பிதழ்’ என்ற மலர் ஒன்றும் என்.செல்வராஜா, த.ஜெயபாலன் ஆகியோரைத் தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு 48 பக்கங்களில் வெளியிடப்பட்டது. இவ்விதழில் மலேசிய இலக்கியம் பற்றிய ஈழத்து, மலேசிய எழுத்தாளர்களின் ஆக்கங்களும், கண்காட்சியில் வைக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட மலேசிய சஞ்சிகைகள், நூல்கள் ஆகியவற்றின் விபரங்கள் கொண்ட மலேசிய நூல்தேட்டம் பதிவுகளும் இடம்பெற்றிருந்தன.

இந்நிகழ்வின் தொடர்ச்சியாக, மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை பதிவுசெய்யும் முயற்சியும் இலண்டனில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தினதும், மலாயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையினதும், தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தினதும் ஆதரவுடன் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அமரர் இராம. சுப்பையா அவர்கள் 1969இல் தொகுத்திருந்த தமிழ் மலேசியானாவின் அடியொற்றி விரிவான முறையில் தயாராகும் இந்த நூற்பட்டியலின் வெளியீட்டுடன், மலேசிய நூலியல் முயற்சிகளில் ஈழத்தமிழரின் பங்களிப்பு மேலும் ஒரு படி நெருக்கமடையும்.

முடிவுரை

மலேசியாவில் தமிழ் வளர்க்கும் தகைமையாளர்கள் அவ்வப்போது தோன்றி, தமிழ் மக்களிடையே தமிழுணர்வையும் இன உணர்வையும் அவ்வப்போது வளர்த்து வந்துள்ளார்கள். ஏதாவது ஒரு புதுமை என்றால் அது மலேசிய மண்ணில் தான் நிகழ்கிறது என்ற கருத்து இன்று வலுவாகி வருவதற்கு அங்கே நிகழ்ந்து முடிந்த பல முதல் மாநாடுகள் சான்றாக அமைகின்றன. முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, உலகத் தமிழ்ப் பண்பாட்டு விழா, உலகத்திருக்குறள் மாநாடு, உலகத் தமிழர் மாநாடு, உலகத் தமிழாசிரியர் மாநாடு, உலகத் தமிழ் எழுத்தாளர் தினம் எனப் பட்டியல் நீளும்.

இத்தகைய விடயங்களை உலகளாவிய நிலையில் சிந்திப்பதற்கு, சந்திப்பதற்கு செயல்படுவதற்கு முதல் கால்கோள்விழாவை மலேசிய மண்ணில் மலேசியத் தமிழர்கள் தான் செய்கின்றார்கள். இருந்தும் மலேசிய இலக்கியங்கள் குடத்துள் விளக்காகவே நீண்டகாலம் ஒளிபாய்ச்சி வந்துள்ளது. இவ்விளக்கை குன்றின் மீது ஏற்றி வைக்கக் கை கொடுப்பதற்கு மலேசிய இலக்கியவாதிகள் அண்மைக்காலம் வரை பெருமளவில் நம்பியிருந்த தமிழகத்தின் படைப்பிலக்கிய உலகம் முன்வரவில்லை. இன்று வெறும் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் மலேசிய படைப்பிலக்கிய கர்த்தாக்கள் எதிர்பார்க்கவில்லை. தம்முடன் தோள்கொடுத்து, மலேசியத் தமிழ் இலக்கியத்தை உலகறியச் செய்வதற்கான துணையையே அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.அதை மானசீகமாக உணர்ந்தவர்கள் ஈழத்துத் தமிழர்களே என்ற கருத்தும் மலேசிய இலக்கியவாதியிடம் மேலோங்கியுள்ளது. ஈழத்தமிழர்களின் படைப்பிலக்கியங்களுக்கும், அவர்களது அண்மைக்கால புலப்பெயர்வு வரை இத்தகைய நிலைமையே காணப்பட்டு வந்துள்ளது.

மலேசிய மண்ணில் இன்று மலேசியாவின் அடையாளச் சின்னமாக நிமிர்ந்து நிற்கும் இரட்டைக் கோபுரங்கள் கூட, யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து மலேயாவுக்குச் சென்றடைந்தது இன்று மலேசியாவின் பெற்றோலியத் துறையின் பெரும் பங்காளராக இருக்கும் தமிழர் ஒருவருக்கே உரியது என்ற செய்தியும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

மலேயாவுக்கு பொருளாதார வளம்நாடிக் குடியேறிய யாழ்ப்பாணத்துத் தமிழர்களின் மேலாதிக்கப் போக்கினால் தமது மூதாதையர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட மனக்காயங்கள் நடந்து முடிந்த வரலாறாகியுள்ள இன்றைய நிலையில் நவீன ஈழத்தமிழர்களின் தாயக மீட்பும், புலம்பெயர்வாழ்வும் மலேசியத் தமிழர்களிடையே புதியதொரு பார்வையை- அக்கறையை ஈழத்தமிழர்களின் பால் ஈட்டியுள்ளது. இதற்கு ஆதாரமாக பல விடயங்களை அந்த மண்ணில் காண முடிகின்றது.

கோலாலம்பூரிலிருந்த 'செம்பருத்தி’ என்ற மாத இதழ் நீண்டகாலமாக வெளிவருகின்றது. ஈழத்தமிழரின் ஆதரவுக் குரல்கள் அதில் வெளிப்படையாக ஒலிக்கின்றன. பெ.கோ. மலையரசன் அவர்கள் 2003இல் பாய்புலி பிரபாகரன் பிள்ளைத்தமிழ், என்ற இலக்கியத்தை கோலாலம்பூரில் படைத்துள்ளார். அந்நூல், விடுதலைப்புலிகளின் போர்ப்பரணியாக மலேசியத் தமிழர்களின் கரங்களில் தவழ்கின்றன. இந்தப் பட்டியல் முடிவில்லாது நீண்டு செல்கின்றது.