இரணிய வதம் -

தானே கடவுள் என்று சொல்லித் திரிந்த இரணியகசிபுவை அழிக்க அவதாரமெடுத்தார் விஷ்னு. அவனை அழிக்க சிங்க முகமும், மனித உடலும் கொண்டு “நரசிம்மராக” பூமியில் தோன்றினார். அவனைக் கொன்று தின்றார். அவனுடைய அசுர ரத்தம் விஷ்னுவை ஆட்கொண்டது. அவனை அழிக்க வந்த கோபம் அவரை ஆட்கொண்டது. உயிர்களுக்கும், தேவர்களுக்கும் அச்சம் ஏற்பட்டது. எல்லோரும் சிவனிடம் வேண்டச் சென்றனர்.
சரபேஸ்வரர் தோற்றம் -

மனைவியாக இருந்தாலும் லட்சுமிக்கும் நரசிம்மர் மேல் பயம் வந்தது. எங்கே தன்னையும் கொன்று விடுவாரோ என பயந்து எல்லாம் வல்ல ஈசனின் திருவடிகளில் சமர்ப்பனமானாள். எல்லையில்லாத அன்புடையவனும், கருனைக்கடலுமான ஈசனுக்கு கோபம் வந்தது.
ஒரு பெண் தன் காலடியில் விழுந்து வணங்கி, நற்கதி அருள வேண்டும் என வேண்டுவதைப் பார்த்தார். எட்டுக் கால்களும், நான்கு கைகளும்,இரண்டு இறக்கைகளும், கூர்மையான நகங்கள், பற்கள், யாளிமுகமும் கொண்ட சரபேஸ்வரராக மாறினார். பாதி உருவம் அகோர பறவையாகவும், மீதியுருவம் அகோர மிருகமாகவும் இருந்தது. அப்படியே நரசிம்மர் முன் தோன்றினார்.
நரசிம்மருடன் சண்டை -

மிக அகோரமாக எல்லா மிருகங்களும் இணைந்த உருவம் திடீரென தன் முன் தோன்றியவுடன் நரசிம்மருக்கு ஒன்றும் புரியவில்லை. தன்னை அழிக்க ஒரு சக்தி வந்திருப்பதாக எண்ணினார். சரபேஸ்வரரோ “ஹா” என்று ஒரு சத்தம் எழுப்பியவுடன், அண்டங்கள் அதிர்ந்தன. மேலோகங்கள் ஆடின, நரசிம்மருக்கு கோபம் போய் பயம் வந்தது. அந்தப் பயத்தினால் சரபேஸ்வரை தாக்க முற்பட்டபோது, சரபோஸ்வரின் ஸ்பரிசத்தால் நரசிம்மர் நாராயணானார்.
லட்சுமி நரசிம்மர் -
பயந்து போய் நின்று கொண்டிருந்த லட்சுமியுடன் சேர்ந்து ஈசனை வணங்கினார். ஈசனும் லட்சுமி நரசிம்மராக இந்த உலகில் மக்களுக்கு அருள் செய் என கட்டளையிட்டார்.
திருபுவனம் -

திருபுவனம் சிவபரத்துவத்தை விளக்கி நிற்கும் உயர்பெருந்தலம். சுவாமி நடுக்கம் தீர்த்த பெருமான் என்ற பொருளில் கம்பகரேஸ்வரர் என்ற திருப்பெயருடனும், அம்பாள் அறம்வளர்த்தநாயகி, தர்மசம்வர்த்தினி என்ற திருப்பெயருடனும் அருள் வழங்கும் சிறப்புடையது. இத்தலத்தின் பழம்பெயர் திருபுவனவீரபுரம் என்பதாகும்.
அசுவக்கிரீவன், விருஷபக்கிரீவன், வியாளக்கிரீவன், பிரமன், இலக்குமி, வருணன், விஷ்ணு, சித்ரரதன், சுகோஷன், மாந்தாதா, நாரதர், வரகுணர் முதலியோர் வழிபட்ட பெருமை உடையது இத்தலமாகும். இரணியனுடைய குருதியைப் பருகிய நரசிம்மம் அறிவு திரிந்து உலகம் அனைத்தையும் அழிக்கத் தொடங்கியபோது இத்தலப் பெருமான் சரபப் பறவை உருக்கொண்டு அதன் கொடுமையை அடக்கியதால் சரபேஸ்வரர் என்ற பெயருடன் இவ்வாலயத்தில் தனி மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.
பிரத்யங்கரா தேவி -

சக்தியின் உக்கிரமான வடிவம்தான் மஹா பிரத்யங்கரா. இந்த பிரத்யங்கரா நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடு எட்டு கைகளோடு, மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காட்சி தருபவள். சரப வடிவத்தின் இறக்கைப் பக்கம் இருப்பவள் இந்த பிரத்யங்கரா தேவி.இந்த பிரத்யங்கரா சிவனின் ஒரு பக்க சக்தி.