திருச்சிற்றம்பலம்
இயற்பகை நாயனார் புராணம்
1. சென்னி வெண்குடை நீடு அநபாயன் திருக் குலம் புகழ் பெருக்கிய சிறப்பின் 0404-1
மன்னு தொல் புகழ் மருத நீர் நாட்டு வயல் வளம் தர இயல்பினில் அளித்துப் 0404-2
பொன்னி நல் நதி மிக்க நீர் பாய்ந்து புணரி தன்னையும் புனித மாக்குவதோர் 0404-3
நன்னெடும் பெரும் தீர்த்த முன்னுடைய நலம் சிறந்தது வளம் புகார் நகரம் 0404-4
2. அக் குலப் பதிக் குடி முதல் வணிகர் அளவில் செல்வத்து வளமையின் அமைந்தார் 0405-1
செக்கர் வெண் பிறைச் சடையவர் அடிமைத் திறத்தின் மிக்கவர் மறைச் சிலம்படியார் 0405-2
மிக்க சீர் அடியார்கள் யார் எனினும் வேண்டும் யாவையும் இல்லை என்னாதே 0405-3
இக் கடல் படி நிகழ முன் கொடுக்கும் இயல்பின் நின்றவர் உலகு இயற் பகையார் 0405-4
3. ஆறு சூடிய ஐயர் மெய் அடிமை அளவிலாத ஓர் உளம் நிறை அருளால் 0406-1
நீறு சேர் திரு மேனியார் மனத்து நினைத்த யாவையும் வினைப்பட முடித்து 0406-2
மாறு இலாத நன்னெறியினில் விளங்கும் மனை அறம் புரி மகிழ்ச்சியின் வந்த 0406-3
பேறெலாம் அவர் ஏவின செய்யும் பெருமையே எனப் பேணி வாழ் நாளில் 0406-4
4. ஆயும் நுண் பொருள் ஆகியும் வெளியே அம்பலத்துள் நின்று ஆடுவார் உம்பர் 0407-1
நாயகிக்கும் அ·து அறியவோ பிரியா நங்கைதான் அறியாமையோ அறியோம் 0407-2
தூய நீறு பொன் மேனியில் விளங்கத் தூர்த்த வேடமும் தோன்ற வேதியராய் 0407-3
மாய வண்ணமே கொண்டு தம் தொண்டர் மாறாத வண்ணமும் காட்டுவான் வந்தார் 0407-4
5. வந்து தண்புகார் வணிகர் தம் மறுகின் மருங்கு இயற் பகையார் மனை புகுந்த 0408-1
எந்தை எம்பிரான் அடியவர் அணைந்தார் என்று நின்றதோர் இன்ப ஆதரவால் 0408-2
சிந்தை அன்பொடு சென்று எதிர் வணங்கிச் சிறப்பின் மிக்க அர்ச்சனைகள் முன் செய்து 0408-3
முந்தை எம் பெரும் தவத்தினாலென்கோ முனிவர் இங்கு எழுந்து அருளியது என்றார் 0408-4
6. என்று கூறிய இயற்பகையார் முன் எய்தி நின்ற அக் கைதவ மறையோர் 0409-1
கொன்ற வார்சடையார் அடியார்கள் குறித்து வேண்டின குணம் எனக் கொண்டே 0409-2
ஒன்றும் நீர் எதிர் மறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டு நும் பாலொன்று வேண்டி 0409-3
இன்று நான் இங்கு வந்தனன் அதனுக்கு இசையலாம் எனில் இயம்பலாம் என்றார் 0409-4
7. என்ன அவ்வுரை கேட்டு இயற்பகையார் யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில் 0410-1
அன்னது எம்பிரான் அடியவர் உடைமை ஐயம் இல்லை நீர் அருள் செயும் என்ன 0410-2
மன்னு காதல் உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு என அங்கணர் எதிரே 0410-3
சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து தூய தொண்டனார் தொழுது உரை செய்வார் 0410-4
8. இது எனக்கு முன்பு உள்ளதே வேண்டி எம் பிரான் செய்த பேறு எனக்கு என்னாக் 0411-1
கதுமெனச் சென்று தம் மனைவாழ் வாழ்க்கை கற்பின் மேம்படு காதலி யாரை 0411-2
விதி மணக் குல மடந்தை இன்றுனை இம் மெய்த் தவர்க்கு நான் கொடுத்தனன் என்ன 0411-3
மது மலர்க் குழலாள் மனைவியார் கலங்கி மனம் தெளிந்த பின் மற்று இது மொழிவார் 0411-4
9. இன்று நீர் எனக்கு அருள் செய்தது இதுவேல் என உயிர்க்கு ஒரு நாத நீர் உரைத்தது 0412-1
ஒன்றை நான் செயும் அத்தனை அல்லால் உரிமை வேறு உளதோ எனக்கு என்று 0412-2
தன் தனிப்பெருங் கணவரை வணங்கத் தாழ்ந்து தொண்டனார் தாம் எதிர் வணங்க 0412-3
சென்று மாதவன் சேவடி பணிந்து திகைத்து நின்றனள் திருவினும் பெரியாள் 0412-4
10. மாது தன்னை முன் கொடுத்த மாதவர் தாம் மனம் மகிழ்ந்து பேர் உவகையின் மலர்ந்தே 0413-1
யாது நான் இனிச் செய் பணி என்றே இறைஞ்சி நின்றவர் தம் எதிர் நோக்கி 0413-2
சாதி வேதியர் ஆகிய தலைவர் தையல் தன்னை யான் தனிக் கொடு போகக் 0413-3
காதல் மேவிய சுற்றமும் பதியும் கடக்க நீ துணை போதுக என்றார் 0413-4
11. என்று அவர் அருளிச் செய்ய யானே முன் செய் குற்றேவல் 0414-1
ஒன்றியது தன்னை என்னை உடையவர் அருளிச் செய்ய 0414-2
நின்றது பிழையாம் என்று நினைந்து வேறு இடத்துப் புக்குப் 0414-3
பொன் திகழ் அறுவை சாத்தி பூங்கச்சுப் பொலிய வீக்கி 0414-4
12. வாளடு பலகை ஏந்தி வந்து எதிர் வணங்கி மிக்க 0415-1
ஆளரி ஏறு போல்வார் அவரை முன் போக்கிப் பின்னே 0415-2
தோளிணை துணையே ஆகப் போயினார் துன்னினாரை 0415-3
நீளிடைப் பட முன் கூடி நிலத்திடை வீழ்த்த நேர்வார் 0415-4
13. மனைவியார் சுற்றத்தாரும் வள்ளலார் சுற்றத்தாரும் 0416-1
இனையது ஒன்றி யாரே செய்தார் இயற்பகை பித்தன் ஆனால் 0416-2
புனை இழை தன்னைக் கொண்டு போவதாம் ஒருவன் என்று 0416-3
துனை பெரும் பழியை மீட்பான் தொடர்வதற்கு எழுந்து சூழ்வார் 0416-4
14. வேலொடு வில்லும் வாளும் சுரிகையும் எடுத்து மிக்க 0417-1
காலென விசையில் சென்று கடிநகர் புறத்துப் போகிப் 0417-2
பாலிரு மருங்கும் ஈண்டிப் பரந்த ஆர்வம் பொங்க 0417-3
மால் கடல் கிளர்ந்தது என்ன வந்து எதிர் வளைத்துக் கொண்டார் 0417-4
15. வழி விடும் துணை பின் போத வழித்துணை ஆகி உள்ளார் 0418-1
கழி பெரும் காதல் காட்டிக் காரிகை உடன் போம் போதில் 0418-2
அழிதகன் போகேல் ஈண்டவ் வருங் குலக் கொடியை விட்டுப் 0418-3
பழிவிட நீ போ என்று பகர்ந்து எதிர் நிரந்து வந்தார் 0418-4
16. மறை முனி அஞ்சினான் போல் மாதினைப் பார்க்க மாதும் 0419-1
இறைவனே அஞ்ச வேண்டாம் இயற்பகை வெல்லும் என்ன 0419-2
அறை கழல் அண்ணல் கேளா அடியனேன் அவரை எல்லாம் 0419-3
தறை இடைப் படுத்துகின்றேன் தளர்ந்து அருள் செய்யேல் என்று 0419-4
17. பெரு விறல் ஆளி என்னப் பிறங்கு எரி சிதற நோக்கிப் 0420-1
பரிபவப் பட்டு வந்த படர் பெருஞ் சுற்றத் தாரை 0420-2
ஒருவரும் எதிர் நில்லாமே ஓடிப் போய்ப் பிழையும் அன்றேல் 0420-3
எரி சுடர் வாளில் கூறாய்த் துடிக்கின்றீர் என்று நேர்ந்தார் 0420-4
18. ஏட! நீ என் செய்தாயால்? இத்திறம் இயம்பு கின்றாய் 0421-1
நாடுறு பழியும் ஒன்னார் நகையையும் நாணாய் இன்று 0421-2
பாடவம் உரைப்பது உன்றன் மனைவியைப் பனவற்கு ஈந்தோ 0421-3
கூடவே மடிவது அன்றிக் கொடுக்க யாம் ஓட்டோம் என்றார் 0421-4
19. மற்றவர் சொன்ன மாற்றம் கேட்டலும் மனத்தின் வந்த 0422-1
செற்ற முன் பொங்க உங்கள் உடல் துணி எங்கும் சிந்தி 0422-2
முற்று நும் உயிரை எல்லாம் முதல் விசும்பு ஏற்றிக் கொண்டு 0422-3
நற்றவர் தம்மைப் போக விடுவேன் என்று எழுந்தார் நல்லோர் 0422-4
20. நேர்ந்தவர் எதிர்ந்த போது நிறைந்த அச் சுற்றத்தாரும் 0423-1
சார்ந்தவர் தம் முன் செல்லார் தையலைக் கொண்டு பெற்றம் 0423-2
ஊர்ந்தவர் படிமேற் செல்ல உற்று எதிர் உடன்று பொங்கி 0423-3
ஆர்ந்த வெஞ் சினத்தால் மேல் சென்று அடர்ந்து எதிர் தடுத்தார் (அன்றே. 0423-4
21. சென்று அவர் தடுத்த போதில் இயற்பகையார் முன் சீறி 0424-1
வன்றுணை வாளே யாகச் சாரிகை மாறி வந்து 0424-2
துன்றினர் தோளும் தாளும் தலைகளும் துணித்து வீழ்த்து 0424-3
வென்றடு புலியேறு அன்ன அமர் விளையாட்டில் மிக்கார் 0424-4
22. மூண்டு முன் பலராய் வந்தார் தனி வந்து முட்டினார்கள் 0425-1
வேண்டிய திசைகள் தோறும் வேறு வேறு அமர் செய் போழ்தில் 0425-2
ஆண்டகை வீரர் தாமே அனைவர்க்கும் அனைவர் ஆகிக் 0425-3
காண்டகு விசையில் பாய்ந்து கலந்து முன் துணித்து வீழ்த்தார் 0425-4
23. சொரிந்தன குடல்கள் எங்கும் துணிந்தன உடல்கள் எங்கும் 0426-1
விரிந்தன தலைகள் எங்கும் மிடைந்தன கழுகும் எங்கும் 0426-2
எரிந்தன விழிகள் எங்கும் எதிர்ப்பவர் ஒருவர் இன்றித் 0426-3
திரிந்தனர் களனில் எங்கும் சிவன் கழல் புனைந்த வீரர் 0426-4
24. மாடலை குருதி பொங்க மடிந்த செங் களத்தின் நின்றும் 0427-1
ஆடுறு செயலின் வந்த கிளைஞரோடு அணைந்தார் தம்மில் 0427-2
ஓடினார் உள்ளார் உய்ந்தார் ஒழிந்தவர் ஒழிந்தே மாண்டார் 0427-3
நீடிய வாளும் தாமும் நின்றவர் தாமே நின்றார் 0427-4
25. திருவுடை மனைவியாரைக் கொடுத்து இடைச் செறுத்து முன்பு 0428-1
வரு பெரும் சுற்றம் எல்லாம் வாளினால் துணித்து மாட்டி 0428-2
அருமறை முனியை நோக்கி அடிகள் நீர் அஞ்சா வண்ணம் 0428-3
பொருவருங் கானம் நீங்க விடுவன் என்று உடனே போந்தார் 0428-4
26. இருவரால் அறிய ஒண்ணா ஒருவர் பின் செல்லும் ஏழை 0429-1
பொரு திறல் வீரர் பின்பு போக முன் போகும் போதில் 0429-2
அருமறை முனிவன் சாய்க்காடு அதன் மருங்கு அணைய மேவித் 0429-3
திரு மலி தோளினானை மீள் எனச் செப்பினானே 0429-4
27. தவ முனி தன்னை மீளச் சொன்ன பின் தலையால் ஆர 0430-1
அவன் மலர்ப் பதங்கள் சூடி அஞ்சலி கூப்பி நின்று 0430-2
புவனம் மூன்று உய்ய வந்த பூசுரன் தன்னை ஏத்தி 0430-3
இவன் அருள் பெறப் பெற்றேன் என்று இயற்பகையாரும் மீண்டார் 0430-4
28. செய்வதற்கு அரிய செய்கை செய்த நல் தொண்டர் போக 0431-1
மை திகழ் கண்டன் எண்தோள் மறையவன் மகிழ்ந்து நோக்கிப் 0431-2
பொய் தரும் உள்ளம் இல்லான் பார்க்கிலன் போனான் என்று 0431-3
மெய் தரு சிந்தையாரை மீளவும் அழைக்கல் உற்றான் 0431-4
29. இயற்பகை முனிவா ஓலம் ஈண்டு நீ வருவாய் ஓலம் 0432-1
அயர்ப்பு இலாதானே ஓலம் அன்பனே ஓலம் ஓலம் 0432-2
செயற்கருஞ் செய்கை செய்த தீரனே ஓலம் என்றான் 0432-3
மயக்கறு மறை ஓலிட்டு மால் அயன் தேட நின்றான் 0432-4
30. அழைத்த பேர் ஓசை கேளா அடியனேன் வந்தேன் வந்தேன் 0433-1
பிழைத்தவர் உளரேல் இன்னும் பெருவலி தடக்கை வாளின் 0433-2
இழைத்தவர் ஆகின்றார் என்று இயற்பகையார் வந்து எய்தக் 0433-3
குழைப் பொலி காதினானும் மறைந்தனன் கோலம் கொள்வான் 0433-4
31. சென்றவர் முனியைக் காணார் சேயிழை தன்னைக் கண்டார் 0434-1
பொன்திகழ் குன்று வெள்ளிப் பொருப்பின் மேல் பொலிந்தது என்ன 0434-2
தன்துணை உடனே வானில் தலைவனை விடை மேல் கண்டார் 0434-3
நின்றிலர் தொழுது வீழ்ந்தார் நிலத்தினின்று எழுந்தார் நேர்ந்தார் 0434-4
32. சொல்லுவது அறியேன் வாழி தோற்றிய தோற்றம் போற்றி 0435-1
வல்லை வந்து அருளி என்னை வழித்தொண்டு கொண்டாய் போற்றி 0435-2
எல்லையில் இன்ப வெள்ளம் எனக்கு அருள் செய்தாய் போற்றி 0435-3
தில்லை அம்பலத்துள் ஆடும் சேவடி போற்றி என்ன 0435-4
33. விண்ணிடை நின்ற வெள்ளை விடையவர் அடியார் தம்மை 0436-1
எண்ணிய உலகு தன்னில் இப்படி நம்பால் அன்பு 0436-2
பண்ணிய பரிவு கண்டு மகிழ்ந்தனம் பழுது இலாதாய் 0436-3
நண்ணிய மனைவி யோடு நம்முடன் போதுக என்று 0436-4
34. திருவளர் சிறப்பின் மிக்க திருத் தொண்டர் தமக்குந் தேற்றம் 0437-1
மருவிய தெய்வக் கற்பின் மனைவியார் தமக்குந் தக்க 0437-2
பெருகிய அருளின் நீடு பேறு அளித்து இமையோர் ஏத்தப் 0437-3
பொரு விடைப் பாகர் மன்னும் பொற் பொது அதனுள் புக்கார் 0437-4
35. வானவர் பூவின் மாரி பொழிய மா மறைகள் ஆர்ப்ப 0438-1
ஞான மா முனிவர் போற்ற நல மிகு சிவலோகத்தில் 0438-2
ஊனமில் தொண்டர் கும்பிட்டு உடன் உறை பெருமை பெற்றார் 0438-3
ஏனைய சுற்றத்தாரும் வானிடை இன்பம் பெற்றார் 0438-4
36. இன்புறு தாரம் தன்னை ஈசனுக்கு அன்பர் என்றே 0439-1
துன்புறாது உதவும் தொண்டர் பெருமையைத் தொழுது வாழ்த்தி 0439-2
அன்புறு மனத்தால் நாதன் அடியவர்க்கு அன்பு நீடு 0439-3
மன்புகழ் இளைசை மாறன் வளத்தினை வழுத்தல் உற்றேன் 0439-4
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக